பழங்குடியின மக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், ராம்கோ நகர் மற்றும் இராஜபாளையம் வட்டம், அயன்கொல்லான்கொண்டான் பகுதியில் வசிக்கின்ற பழங்குடியினர் மக்களுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சார்பில், மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (20.06.2026) பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனடிப்படையில், அனைத்து துறை சார்ந்த நலத்திட்டங்கள் குறித்து அந்தந்த துறை அலுவலர்களால் எடுத்துரைக்கப்பட்டது. இத்திட்டங்களை பயன்படுத்தி பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்.பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நல்ல முறையில் கல்வி கற்க அனுமதிக்க வேண்டும். குழந்தை திருமணங்களை தவிர்க்க வேண்டும். இக்குழந்தை திருமணங்களினால் பிறக்கும் குழந்தைகள் பல பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.குழந்தைகள் நல்ல ஆரோக்கியமானதாகவும், நல்ல திறன் உடையவர்களாகவும் பிறப்பதற்கு குழந்தை திருமணங்களை தவிர்த்து உரிய வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
நம்முடைய பகுதிகளில் கிடைக்கும் பொருட்களை கொண்டே, அனைவரும் சுய தொழில் புரிந்து அப்பொருட்களை பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று முன்னேறும் வகையில் ஒரு குழு அமைத்து செயல்பட வேண்டும். கர்ப்பிணித் தாய்மார்கள் உரிய சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவர்கள் அறிவுரையினை முறையாக பின்பற்ற வேண்டும். மகப்பேற்றினை அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு, மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து, அங்கன்வாடி மையத்தினை நேரில் சென்று பார்வையிட்டு, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை சுவைத்து ஆய்வு செய்தார்.மேலும், இராஜபாளையம் வட்டத்தில் மகளிர் குழு அமைத்து மானியத்துடன் கூடிய கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுதல் தொடர்பான மனுக்களை பொதுமக்களிடமிருமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்றுக் கொண்டார்.நிகழ்ச்சியில், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினையும் (Nutrition Kit), மாவட்டத் தொழில் மையம் சார்பில், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் (AABCS) ஒரு பயனாளிக்கு ஆட்டோவினையும் (Auto) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மருத்துவத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply