இளைஞர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் உயிர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தேநீர் கடை மற்றும் சிறுதானிய உணவகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் இளைஞர் நீதிக் குழுமத்தின் வழிகாட்டுதலின்படி, இளைஞர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் உயிர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தேநீர் கடை மற்றும் சிறுதானிய உணவகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (15.07.2026) திறந்து வைத்தார். மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு திட்டமான உயிர் திட்டமானது சட்டத்துடன் முரண்பட்ட குழந்தைகள் சமூகத்தில் சுயமரியாதையுடனும், தன்னம்பிக்கையுடனும் வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொண்டு மறுவாழ்வு பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், அருப்புக்கோட்டை ஆத்திப்பட்டியைச் சேர்ந்தவருக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் (EDII-TN) சுயதொழில் பயிற்சி வழங்கப்பட்டது. மேலும், சுயதொழில் தொடங்குவதற்கான முதலீட்டிற்கு வங்கியின் மூலம் ரூ.1,00,654/- கடனுதவியும், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் இடமும் வழங்கப்பட்டுள்ளது. இதில் தேநீர் கடை மற்றும் சிறுதானிய உணவகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.இந்த முயற்சியின் மூலம், சட்டத்துடன் முரண்பட்ட குழந்தைகள் தங்களது வாழ்க்கையை சீரமைத்து, சுயதொழில் வாயிலாக பொருளாதார ரீதியாக முன்னேறி, சமூகத்தில் மதிப்புமிக்க குடிமக்களாக மறுவாழ்வு பெறுவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம், இதுபோன்ற மறுவாழ்வு நடவடிக்கைகள் மூலம் சட்டத்துடன் முரண்பட்ட குழந்தைகளை சமூகத்துடன் இணைத்து, அவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்தும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.இந்நிகழ்வில், ஊராட்சிகள் உதவி இயக்குநர்(பயிற்சி) திருமதி கீதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி மீனாட்சி, மாவட்ட திட்ட மேலாளர்(தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்) திரு.பிலிப் மில்டன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply