இந்திய தேர்தல் ஆணையத்திடம் கணக்குகளைத் தாக்கல் செய்யாத அரசியல் கட்சிகளை பதிவு நீக்கம் செய்வதற்கான நடைமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள அரசியல் கட்சிகள், கட்சிகளைப் பதிவு செய்வதற்கான வழிமுறைகளில் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளை மீறியுள்ள நிலையில் அக்கட்சிகளின் பெயர்களை பதிவு நீக்கம் செய்வதற்கான நடைமுறைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு நிபந்தனையின்படி, ஒவ்வொரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியும் தனது வரவு செலவுக் கணக்குளைத் தணிக்கை செய்து பெற்று, ஒவ்வொரு நிதியாண்டிற்கான தணிக்கை அறிக்கையை அடுத்த நிதியாண்டின் நவம்பர் மாதத்திற்குள்ளாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும், தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சட்டமன்றத் தேர்தல் எனில் தேர்தல் முடிவடைந்த 75 நாட்களுக்குள்ளும், நாடாளுமன்றத் தேர்தல் எனில் தேர்தல் முடிவடைந்த 90 தினங்களுக்குள்ளாகவும் தங்கள் கட்சியின் தேர்தல் செலவின விபரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு கணக்குகளைத் தாக்கல் செய்யாத 39 அரசியல் கட்சிகளை பதிவு நீக்கம் செய்வதற்கான நடைமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வீரச்செல்லையாபுரம் கிராமத்தில் இயங்குவதாகப் பதிவு செய்துள்ள ‘தேச மக்கள் முன்னேற்றக் கழகம்” என்ற அரசியல் கட்சியானது, இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றும், எனவே இக்கட்சியை ஏன் பதிவுநீக்கம் செய்யக் கூடாது என சென்னை, தலைமைத் தேர்தல் அலுவலர் விசாரணை அறிவிப்பு அனுப்பியுள்ளார்.
இக்கட்சியானது, தமது தரப்பிலான விளக்கத்தை அளிக்க 08.10.2025 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply