வனமும் வாழ்வும் என்ற தலைப்பில் நடைபெற்ற ஆசிரியர் பயிற்சி பட்டறையினை, அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வன விரிவாக மையத்தில் (17.11.2025) திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் (திருவில்லிபுத்தூர் கோட்டம்) சார்பில், வன பாதுகாப்பு, காட்டுத்தீ மேலாண்மை, வனவிலங்கு கணக்கெடுப்பு மற்றும் மனித-விலங்கு மோதல் மேலாண்மை பயிற்சி திட்டத்தின் கீழ் வனமும் வாழ்வும் என்ற தலைப்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இரண்டு நாள் ஆசிரியர் பயிற்சி பட்டறையினை துணை இயக்குநர்(திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) மரு.இரா.முருகன்,இ.வ.ப., அவர்கள் தலைமையில், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ராணி ஸ்ரீகுமார் அவர்கள் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் 20,000 அரசு பள்ளி மாணவர்களுக்கு வன பாதுகாப்பு, காட்டுத்தீ மேலாண்மை, வனவிலங்கு கணக்கெடுப்பு மற்றும் மனித-விலங்கு மோதல் மேலாண்மை குறித்த சான்றிதழ் பயிற்சி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் 25 அரசு மேல்நிலை/உயர்நிலை பள்ளிகள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற அரசு வழிகாட்டுதலின்படி, விருதுநகர் மாவட்டத்திற்குள் உள்ள 25 அரசு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.ஒவ்வொரு பள்ளியிலும் 11 ஆம் வகுப்பு மாணவர்களில் இருந்து 10 மாணவர்கள், 10 மாணவிகள் என மொத்தம் 20 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் பயிற்சி பெறுவதற்கான மாணவர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.மேலும், தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் உயிரியல் அல்லது சுற்றுச்சூழல் அறிவியல் தொகுப்புகளை கற்பிக்கும் 25 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி, தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு வனத்துறையின் பயிற்சியாளர்கள் (Forest Range Officer) மூலம் இரண்டு நாள் மாவட்ட அளவிலான பயிற்சி பட்டறை இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் வனவிரிவாக்க மையத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு வன பாதுகாப்பு, காட்டுத்தீ தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பற்றிய விளக்கங்கள், பள்ளிகளில் மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய பயிற்சி முறையை ஒருங்கிணைத்து பயிற்சி அளித்தல், வனவிலங்கு கணக்கெடுப்பு அடிப்படை நடைமுறைகள் மற்றும் புது தலைமுறைக்கு வன பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மனித-விலங்கு மோதல் தடுப்பு, மேலாண்மை மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்குதல் ஆகியவை குறித்து இவ்வகுப்பில், பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.இந்த இரண்டு நாள் பயிற்சி நிறைவடைந்த பின், தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் மாணவர்களுக்கு வகுப்பு வாரியாக பயிற்சி வழங்குவார்கள். பின்னர், மாணவர்களின் மதிப்பீடு செய்யப்பட்டு அரசு வழங்கும் சான்றிதழ் வழங்கல் நிகழ்ச்சி நடைபெறும்.
இயற்கை என்பது நாம் ரசிக்கக் கூடியது. இயற்கையை அழித்து விடலாம். ஆனால் அதை நம்மால் உருவாக்குவது கடினம். அந்த இயற்கை மீதான விழிப்புணர்வை உண்டாக்குவதற்கு தான் இது போன்ற பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. நம்முடைய குழந்தைகளுக்கு இதனை சொல்லித் தர வேண்டும். மாணவர்களிடையே இயற்கை மற்றும் மரங்களின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, மரம் வளர்ப்பை அவர்களுக்கு சொல்லித் தர வேண்டும். தாங்கள் வைத்த மரங்கள் தங்களுக்கு முன்னே வளர்ந்து வரும் பொழுது அதனை பார்த்து ரசிக்க கூடிய உணர்வை அவர்களுக்கு உருவாக்க வேண்டும். நம்முடைய நாட்டு மரங்களை வளர்ப்பதை ஊக்குவிக்க வேண்டும். எனவே, இந்த பயிற்சி வகுப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், திருவில்லிபுத்தூர் உதவி வனப்பாதுகாவலர் திரு.ஞானப்பழம், வனச்சரக அலுவலர்(சிவகாசி வன உயிரின சரகம்) திரு.பூவேந்தன், சிவகாசி மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை) திரு.ரெ.சுரேஷ், சீர்மரபினர் வாரிய துணைத்தலைவர் திரு.இராசா அருண்மொழி, திருவில்லிபுத்தூர் நகர்மன்றத்தலைவர் திரு.ரவிக்கண்ணன், திருவில்லிபுத்தூர் முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் திரு.மல்லி கு.ஆறுமுகம், வன சர அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply