1435-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயத்தின் (ஜமாபந்தி) நான்காம் நாளான இன்று வருவாய்த் தீர்வாய அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் 1435-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயத்தின் (ஜமாபந்தி) நான்காம் நாளான இன்று (17.06.2026) வருவாய்த் தீர்வாய அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை பெற்றுக் கொண்டார்.விருதுநகர் மாவட்டத்தில் 1435-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 2026-ம் ஆண்டு ஜூன் 12 தொடங்கி, ஜூன்16 முதல் ஜூன் 19 வரை மற்றும் ஜூன் 23 முதல் ஜூன் 25 வரை ஆகிய நாட்களில் சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது.
அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் (17.06.2026) சாத்தூரில் நடைபெற்ற இத்தீர்வாயத்தில் 4-பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகளையும், 2-பயனாளிகளுக்கு இறப்புச் சான்று ஆணைகளையும், ஈமக்கிரியை உதவித்தொகையாக ரூ.40 ஆயிரம் வீதம் 2 நபர்களுக்கு ரூ.80 ஆயிரத்திற்கான உதவித்தொகையினையும்,தோட்டக்கலைத் துறை சார்பில், நுண் நீர் பாசனத் திட்டத்தின் கீழ் 100 சதவீத மானியத்தில் 2-நபர்களுக்கு தெளிப்பு நீர் பாசனக் கருவிகளையும், இணையதளம் வாயிலாக ஒரு நபருக்கு விதவை மற்றும் வாரிசு சான்றிதழும், ஒரு நபருக்கு பட்டா மாறுதலுக்கான ஆணையினையும்,(16.06.2026) அன்று நடந்த வருவாய்த் தீர்வாயத்தில் கணினி வழி இ-பட்டா வேண்டி மனு அளித்த 11-பயனாளிகளுக்கு அவர்களின் இல்லங்களுக்கே சென்று கணினி வழி இ-பட்டாக்களையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.
இந்த வருவாய் தீர்வாயத்தின் போது கிராம மக்கள் தங்களுக்கு சொந்தமான வேளாண் நிலத்தின் உடமைப் பட்டா, சிட்டா, அடங்கல் குறித்தான விவரங்கள் கேட்டு மனுக்கள் தரலாம். தங்கள் கிராமத்தில் உள்ள குறைகளை நீக்க முறையிடலாம். கல்வி, குடிநீர், நீர் பாசன வாய்க்கால், மயான வசதி, கழிவு நீர் சாக்கடை வசதி முதலிய தேவைகள் குறித்தும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் முறையிடலாம். சொந்த வீட்டு மனை இல்லாதவர்கள் இலவச மனை பட்டா வேண்டி விண்ணப்பிக்கலாம். வீட்டு மனை மட்டும் உடையவர்கள் வீடு கட்ட அரசு கடன் மற்றும் மானியம் கோரி விண்ணப்பிக்கலாம். கிராம மக்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதரவற்ற விதவைகள் மற்றும் முதியோர் ஒய்வூதியம், இலவச அரசு காப்புறுதி அட்டை, வறட்சி நிவாரண நிதி கோருதல், நிலப் பட்டா மாற்றம், நிலப்பட்டா அளவை எண்கள் மாற்றங்கள் தொடர்பாக வருவாய் தீர்வாயத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்கள் உடனடியாக வருவாய்த் தீர்வாய அலுவலரால் நிறைவேற்றப்படும்.
இந்த ஜமாபந்தியின் நோக்கமானது வருவாய் / கிராம கணக்குகள், நில ஆவணங்கள் கணக்கு, பயிர் கணக்கு போன்றவை கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், புள்ளியியல்துறை அலுவலர்கள் எவ்வாறு பராமரித்து வருகின்றனர் என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். மேலும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்கள் பெறப்பட்டு இறுதி நாளன்று பெறப்பட்ட மனுக்களுக்கு பதில் மற்றும் ஆணைகள் வழங்கப்படும்.இந்த வருவாய் தீர்வாயம் அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெறுகிறது. எனவே, பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி, தங்களது கிராமத்திற்கான ஜமாபந்தி நடைபெறும் நாட்களில் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று தங்களது மனுக்களை வழங்கி கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம் என வருவாய்த் தீர்வாய அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்வில், சாத்தூர் நகராட்சி ஆணையாளர் திருமதி ஜெகதீஸ்வரி, வட்டாட்சியர் திரு.மு.வடிவேல், வருவாய்த்துறை அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply