உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம்: 6-வது பதக்கத்தை வெல்வாரா சிந்து?
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் உள்ள இந்திராகாந்தி ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. வரும் 23-ந்தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இதுவரை 5 பதக்கங்களை வென்றுள்ள சிந்து, ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என சாதனை படைத்துள்ளார். இந்த முறை மேலும் ஒரு பதக்கம் வென்றால், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் அதிக பதக்கங்கள் வென்ற வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைக்க முடியும்.
சமீபத்தில் ஜப்பான் ஓபன் பட்டத்தை வென்றது சிந்துவுக்கு கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளது. உலக தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள சிந்து, தனது முதல் சுற்றில் அயர்லாந்தைச் சேர்ந்த 141-ம் நிலை வீராங்கனை சோபியா நோபிளை எதிர்கொள்கிறார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ‘நம்பர் ஒன்’ வீரரும், நடப்பு சாம்பியனுமான சீனாவின் ஷி யுகி, தாய்லாந்தின் விதித்சரண் குன் லாவுத், இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டி, டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஆன்டோன்சென் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய இளம் வீரர் ஆயுஷ் ஷெட்டிக்கு முதல் சுற்றிலேயே சவாலான ஆட்டம் காத்திருக்கிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் ‘பை’ சலுகை பெற்றுள்ள இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி–சிராக் ஷெட்டி ஜோடி நேரடியாக 2-வது சுற்றில் களம் இறங்குகிறது.
பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரிஷா ஜாலி–காயத்ரி கோபிசந்த் ஜோடியும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
காலை 9 மணிக்கு தொடங்கும் போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
0
Leave a Reply