இந்திய தேர்தல்கள்” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான தேர்தல் தொடர்பான வினாடி-வினா போட்டி
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில், (25.01.2025) தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் திருச்சி என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி இணைந்து வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், ‘இந்திய தேர்தல்கள்” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான தேர்தல் தொடர்பான வினாடி-வினா போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், திருச்சி என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி நிறுவனர் திரு.இரா.விஜயாலயன் அவர்கள் விளக்கவுரை ஆற்றினார்.
இந்திய அரசாங்கத்தால் இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்துவதற்காக சனவரி 25-ஆம் தேதி தேசிய வாக்காளர் நாளாக (National Voters' Day) ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்படுகிறது. வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது இந்த நாளின் நோக்கமாகும்.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் இன்று வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், ‘இந்திய தேர்தல்கள்” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான தேர்தல் தொடர்பான வினாடி-வினா போட்டி நடத்தப்படுகிறது.ஒரு தனி மனிதனுடைய வளர்ச்சி தொடர்பாக எந்த ஒரு தத்துவ நூலை எடுத்துக் கொண்டாலும் சரி அல்லது உலகில் வெற்றி பெற்ற மனிதர்கள் தொடர்பான நூல்கள் அல்லது சுயசரிதைகளை எடுத்து படித்தாலும் சரி அவர்களின் வெற்றிக்கான காரணங்களாக அவர்களின் சரியான திட்டமிடல் மற்றும் கடின உழைப்பு ஆகிய இரண்டு மையக்கருத்துக்களை தான் கூறுகின்றன.
“இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர் “
“உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்”
ஆகிய திருக்குறளில் ஒரு விஷயத்தை அது முடியும் வரை அதற்காக காத்திருப்பது அல்லது முடியும் வரை அதற்காக முயற்சி செய்வது என்பதை எல்லோரும் செய்வதில்லை. சில நபர்கள் தான் செய்கிறார்கள். எல்லோரும் அந்த இலக்காக அடையும் வரை சென்று முயற்சி செய்வதில்லை. அதனுடைய வழியை அறிந்து முடியும் வரை வெற்றி பெறக் கூடியவர்கள் சிலர் தான் இருக்கிறார்கள் என திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். தமிழ்நாட்டில் ஏறத்தாழ 15 முதல் 20 இலட்சம் இளைஞர்கள் போட்டித் தேர்வுக்கு தயார் செய்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் 10 முதல் 12 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.அதுபோல, ஆண்டுதோறும் இந்திய அளவில் ஏறத்தாழ 2 இலட்சம் பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படுகிறது. ஆனால் இந்த தேர்வுகளுக்கு தயார் செய்யும் சுமார் 15 இலட்சம் தமிழக இளைஞர்களில் வெற்றி பெறுபவர்களின் சதவீதம் என்பது ஒற்றை இலக்க எண்ணாக தான் இருக்கிறது.
இதில் வெற்றியைத் தாண்டி, போட்டி தேர்வுக்கு உண்மையிலேயே தயார் செய்யக் கூடியவர்களுக்கு ஒரு விரிவான இந்த சமூகத்தைப் பற்றியும், நம்முடைய சூழலை பற்றியும், அரசியலைப் பற்றியும், பொருளாதாரத்தைப் பற்றியும், சுற்றுச்சூழலை பற்றியும் மிகப் பெரிய விழிப்புணர்வு ஏற்படுகிறது. அந்த விழிப்புணர்வு அவருடைய வாழ்க்கைக்கும், அவர்களுடைய குடும்பத்திற்கும், அவர்களுடைய குழந்தைகளுக்கும் மிகப்பெரிய ஒரு வாய்ப்பை உருவாக்குகிறது.அப்படி மிகச் சிறந்த மனித வளத்தை உருவாக்கக்கூடியதாக இந்த போட்டி தேர்வு என்பது அதற்கு தயார் செய்யக்கூடிய மாணவர்களை உருவாக்குகிறது.
போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்வது என்பதும், இது போன்ற அறிவு சார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என்பதும், ஒரு அறிவு சார்ந்த மனித வளத்தை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம் என்பதற்கு சான்றாகும்.எனவே இந்த நிகழ்ச்சிக்காக வருகை தந்திருக்க கூடிய அனைவரும் இதில் வெற்றி தோல்வி என்பதை எல்லாம் தாண்டி இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்திருப்பதும், ஒரு அறிவு சார்ந்த நிகழ்ச்சிக்கு உங்களை ஈடுபடுத்திக் கொள்வதும், உங்கள் எதிர்காலத்திற்கும் உங்களுடைய எதிர்காலத்தில் சிலரை ஆற்றுப்படுத்துவதற்கும், வழிகாட்டியாகவும், உறுதுணையாகவும் இருக்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்த வினாடி - வினா போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து 16 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஒரு குழுவிற்கு இரண்டு நபர்கள் வீதம் 262 குழுக்கள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், சாத்தூர் கோட்டாட்சியர் திரு.சிவகுமார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply