சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல், நிதி மேலாண்மை, போட்டி தேர்வுகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குறித்து நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு
விருதுநகர் மாவட்டம், செந்திக்குமார நாடார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து பாதுகாப்பான சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல், நிதி மேலாண்மை, போட்டி தேர்வுகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குறித்து நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (18.02.2025) தொடங்கி வைத்தார்.
பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய அறிவுரை வழங்குதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். குழந்தைகளாக இருக்கும் போது குடும்பம் மற்றும் சமூகத்தின் பார்வை வேறாக இருக்கும். ஆனால், 18 வயது முடிவடைந்த பின் சட்டத்தின் பார்வையிலும், சமூகத்தின் பார்வையிலும் ஒரு பொறுப்பு மிக்கவர்களாகிறீர்கள்.18 வயதிற்கு பிறகு கிடைக்கும் உரிமையோடு, அதனையொட்டி பொறுப்புகளும், கடமைகளும் நம்மிடம் வந்து சேரும். இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் முகநூல், இணையதளங்களில் இருக்கக்கூடிய வாய்ப்புகள் பற்றி நாம் தெரிந்து கொள்வதை விட அதிகமாக நமது நேரத்தை வீணடிக்கின்றோம்.மிக முக்கியமான வயதை எட்டக்கூடிய பருவம் இந்த கல்லூரி பருவம். நீங்கள் இதற்கு முன்பாக சட்டத்தினுடைய பார்வையில் ஒரு சிறுமி. மிகப்பெரிய சட்டத்திற்கு எதிரான தவறை செய்துவிட்டால் கூட உங்களுக்கான தண்டனைகளோ அல்லது உங்களுக்கான சீர்திருத்த முறைகளோ முற்றிலும் வேறுபட்டது. ஒரு 18 வயது அடைந்தவுடன் உங்களுக்கான உரிமைகள் வந்து விடுகிறது. நீங்கள் உங்களை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்ற அரசியல் தலைமையை தேர்ந்தெடுப்பதற்கான, தேர்தலில் வாக்களிக்கக் கூடிய வாக்காளர் உரிமையை பெறுகிறீர்கள்.
ஒரு இருசக்கர, நான்கு சக்கர வாகனத்தை ஓட்டுவதற்குரிய ஓட்டுன உரிமைத்தையும் பெறுவதற்கான வயது இந்த வயதுதான். 18 வயதில் தான் நீங்கள் உங்கள் வாழ்க்கையை துணையை முடிவு செய்வதற்கான குறைந்தபட்ச வயதாகும். உங்களுக்கு உரிமைகள் வருகிறது என்பதை விட மிக முக்கியமாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது உங்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புணர்வுகள் அதிகமாக இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.ஒவ்வொருவருக்கும் மூன்று விதமான வாழ்க்கை உள்ளது. தனிப்பட்ட வாழ்க்கை, சமூக வாழ்க்கை, தொழில் சார்ந்த வாழ்க்கை ஆகும். தனிப்பட்ட வாழ்க்கை என்பது அவரவருடைய குடும்பம், உறவினர்கள் சம்பந்தப்பட்டது. ஒரு நாளைக்கு 8-லிருந்து 10- மணி நேரம் வரை தொழில்சார்ந்த வாழ்க்கைக்கு நாம் செலவிடுகிறோம். தொழில் சார்ந்த வாழ்க்கைக்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையில் இடைவெளி இருப்பது தான் சமூக வாழ்க்கை.இந்த மூன்றிற்கும் தங்களது வாழ்க்கையை நாம் தகவமைத்து கொண்டிருக்கிறோம்.
குறிப்பாக சமூக ஊடகங்கள் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் பொழுது, சமூகத்தின் உடைய நேரடி தாக்கத்தால் இளைஞர்கள் இம்மூன்றின் மீது தெளிவற்ற புரிதலும் அல்லது இம்மூன்று குறித்த ஐயங்களையும் பற்றி தெளிவாக புரிந்து கொள்வது என்பது மிகவும் அவசியம்.பெண்களுக்கான விடுதலை முன்னேற்றம் என்பது சொத்துரிமை, கல்வி உரிமை, சுதந்திரம் உள்ளிட்டவைகளாகும். இது எல்லாவற்றிற்கும் மிக மிக அடிப்படை என்ன என்று பார்த்தால், அவர்கள் கையில் பணம் இருக்க வேண்டும்.அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அளவிற்கு அதிகாரம் இருக்க வேண்டும் என்பது தான்.
மிக புகழ்பெற்ற தத்துவஞானி, மனிதன் என்பவன் தன்னால் செய்ய முடியாமல் போன, தன்னால் தவற விடப்பட்ட வாய்ப்புகளை நினைத்து உருகும் ஒரு குற்ற உணர்ச்சியின் தொகுப்பு என்று குறிப்பிடுகிறனர். அப்படிப்பட்ட அனுபவங்களை நீங்கள் ஒருபோதும் தவற விடக்கூடாது. உங்களுக்கு என்ன விதமான வாய்ப்புகள் இருக்கின்றன. என்ன விதமான பிரச்சினைகளை எதிர்கொள்கிறீர்கள் என்பதை பற்றி சொல்லப்படக்கூடியது தான் இந்த நிகழ்ச்சி.
யாரெல்லாம் சிறந்த வெற்றிகளை பெற்று சிறந்த நிலையில் இருக்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் ஒரு பொதுவான பண்புகள் இருக்கிறது. யாருக்கெல்லாம் விழிப்புணர்வுகள் அதிகமாக இருக்கிறதோ அவர்கள் எல்லாரும் வெற்றி பெறுகிறார்கள் என்பது தான் அந்த பொதுப்பண்பு.கல்வி, உழைப்பு, திறமை இந்த மூன்றும் தான் மனிதனின் உடைய வெற்றியை தீர்மானிக்கிறது. ஆனால், இம்மூன்றும் இருக்கக்கூடிய எல்லோரும் முன்னேறவில்லை.வாழ்க்கையில் சிறப்பாக வெற்றியை அடைந்தவர்கள் அல்லது தாங்கள் விரும்பக்கூடிய ஒன்றை சரியாக பெற்று பொருளாதாரத்தில், சமூகத்தில் நல்ல வலிமையோடு இருக்கக்கூடிய எல்லோருக்கும் முக்கியமான ஒரு பொதுப்பண்பு இருக்கிறது. அது தான் இன்றைக்கு இருக்கக்கூடிய விழிப்புணர்வும், அந்த விழிப்புணர்வை பெற்ற பிறகு அவர்கள் தேடிய தேடல்கள் தான். எனவே, கல்வி, உழைப்பு, திறமை இந்த மூன்றும் முக்கியமானது தான். ஆனால் இது எல்லாவற்றையும் விட வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு தான் மிகவும் முக்கியம். நல்ல வாய்ப்புகள், விழிப்புணர்வுகள் பெற்றவர்கள் குறித்த தெளிவு பெற்றவர்கள் வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள்.எந்த ஒன்றை தனது இலக்காக, வெற்றியாக நிர்ணயித்து கொண்டு, அவற்றை ஒவ்வொரு நாளும் விரும்ப தகுந்த மாற்றங்களை கொண்டு வந்து, அவர்கள் வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்கள். வெற்றி என்பது இறுதி முடிவு அல்ல. அது தொடர் பயணம்.
மிக பெரிய வெற்றிகள் மட்டுமே வெற்றிகள் அல்ல. சிறு சிறு வெற்றிகளும் கொண்டாடப்பட வேண்டியவை. சிறு சிறு வெற்றிகள் தான் மனிதர்களை தொடர்ச்சியாக நகர்த்திக்கொண்டே இருக்கிறது. இதன் மூலமாக தான் நீங்கள் எதிர்காலத்தில் கல்வி வாய்ப்புகள் குறித்து புரிதல்களை கொண்டிருந்தால் மிகப்பெரிய வெற்றிகளை அடைய முடியும்.மனிதர்கள் வாய்ப்புகளால் உருவாக்கப்படுகிறார்கள். நீங்கள் எவ்வளவு விரிவாகவோ, ஆழமாகவோ தேடுகிறீர்களோ நீங்கள் அவ்வளவு மிக மதிப்பு மிக்க வைரங்களை வாழ்க்கையில் பெறுவீர்கள். இன்றைக்கு மாறி வரக்கூடிய உலகில் கற்றல், கற்பித்தல், புதியனவற்றை தெரிந்து கொள்ளுவதற்கான சூழல் மிகப்பெரிய அளவில் மாறி உள்ளது.எனவே, நீங்கள் விழிப்புணர்வு பெற்ற மாணவிகளாக உங்களது தனிப்பட்ட வாழ்வில், சமூக வாழ்வில் உங்களுடைய குடும்ப வாழ்வில், தொழில் வாழ்வில் இவற்றிற்கு எல்லாம் தனக்கு தேவையான தகவமைப்பை பெற்றுக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி, கல்லூரி முதல்வர், கல்லூரி மாணவிகள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply