சிவகாசியில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற மூன்று சக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் - 2026-னை முன்னிட்டு, வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற மூன்று சக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணியை (25.03.2026) சிவகாசி சார் ஆட்சியர் திரு. முகமது இஃர்பான்,I A S ., அவர்கள் தொடங்கி வைத்தார்.
சட்டமன்றத் தேர்தல் - 2026 நடைபெறவுள்ளதையொட்டி, 18 வயது நிரம்பிய முதல்முறை வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த வாக்காளர்கள் மற்றும் திருநங்கைகள் என அனைத்துத் தரப்பு வாக்காளர்களிடையேயும் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பேரணிகள், கையெழுத்து இயக்கம் மற்றும் ரங்கோலி வரைதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, சிவகாசி சார் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வட்டாட்சியர் அலுவலகம் வரை மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற மூன்று சக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணியைச் சிவகாசி சார் ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்தப் பேரணியில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு, "வாக்களிப்பது நமது உரிமை", "கையூட்டு பெறாமல் வாக்களிப்போம்", "நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிப்போம்" மற்றும் "ஜனநாயகக் கடமையை ஆற்றுவோம்" போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு. செந்தில், மாற்றுத்திறனாளிகள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கப் (உரிமைத் திட்டம்) பணியாளர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
0
Leave a Reply