2025-2026 ஆம் ஆண்டிற்கு சிறந்த கலைஞர் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
தமிழ்நாட்டின் கலைப்புலமைகளை மேம்படுத்தவும், பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களின் கலைத் திறனை சிறப்பிக்கும் வகையிலும் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் செயல்படும் மாவட்டக் கலை மன்றங்களின் வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 2002-2003ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் சிறந்த ஐந்து கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கிடவும் 2021-2022 முதல் சிறந்த பதினைந்து கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கிடவும் அரசு ஆணையிட்டுள்ளது.
அவ்வாணையின்படி 2002-2003ஆம் ஆண்டு முதல் விருதுநகர் மாவட்டத்தில் 2023-2024ஆம் ஆண்டு வரையில் 135 கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளன.
கலை விருதுகள், கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் விருதுநகர் மாவட்டக் கலை மன்றத்தின் வாயிலாக, விருதுநகர் மாவட்டத்தில் இயல், இசை, நாடகம் முதலிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் பதினைந்து கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க மாவட்ட ஆட்;சித் தலைவர் அவர்கள் தலைமையில் தேர்வாளர் குழு அமைக்கப்பட்டு இத்தேர்வுக்குழு வாயிலாக விருதுக்கு விண்ணப்பிக்கும் கலைஞர்களை நேர்முகமாக அழைக்கப்பட்டு கலைவல்லுநர்களை கொண்டு கலைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆகவே, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டு, பரத நாட்டியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், தோல்பாவைக்கூத்து, பொம்மலாட்டம், நையாண்டிமேளம், கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், கணியான் கூத்து, ஓவியம் சிற்பம், அரசன் அரசியாட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், ஆழியாட்டம், கைச்சிலம்பாட்டம், சிலம்பாட்டம் (வீரக்கலை) மற்றும் வில்லிசை முதலிய செவ்வியல் கலைகள், நாட்டுப்புறக் கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும், விருதுகள் கீழ்க்கண்ட நிலைகளில் வழங்கப்படவுள்ளன 18 வயதும் அதற்குட்பட்ட கலைஞர்களுக்கு, கலை இளமணி விருதும், 19 முதல் 35 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை வளர்மணி விருதும், 36 முதல் 50 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலைச் சுடர்மணி விருதும், 51 முதல் 65 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை நன்மணி விருதும், 66 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு கலை முதுமணி விருதும் வழங்கப்படவுள்ளன.
வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் பதினைந்து சிறந்த கலைஞர்களுக்கு பட்டயம், பொன்னாடை மற்றும் பொற்கிழி ஈடாக கீழ்வருமாறு தொகைக்கான காசோலை வழங்கி கௌரவிக்கப்படும்.
கலை இளமணி விருதிற்கு, ரூ.4,000/- பரிசுத்தொகையும், கலை வளர்மணி விருதிற்கு, ரூ.6,000/- பரிசுத்தொகையும், கலை சுடர்மணி விருதிற்கு, ரூ.10,000/- பரிசுத்தொகையும், கலை நன்மணி விருதிற்கு, ரூ.15,000/- பரிசுத்தொகையும், கலை முதுமணி விருதிற்கு, ரூ.20,000/- பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளன.
மேலும், விருதுநகர் மாவட்டத்தில் தேசிய விருதுகள், மாநில விருதுகள், மாநில விருதுகள் (கலைமாமணி) மற்றும் ஏற்கனவே மாவட்டக் கலை மன்றத்தின் விருதுகளைப் பெற்ற கலைஞர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பம் செய்யக்கூடாது.
மேலும், கடந்த ஆண்டுகளில் ஏற்கனவே விருதுக்கு விண்ணப்பம் செய்த கலைஞர்கள் தற்போது புதியதாக விண்ணப்பம் கண்டிப்பாக அனுப்பவேண்டும்;.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த கலைஞர்கள் விருதுகள் பெறுவதற்கான விண்ணப்பத்துடன் வயதுச் சான்று, முகவரிச்சான்று மற்றும் கலை அனுபவச் சான்றுகளின் நகல்களுடன் (தொலைபேசி எண்ணுடன்) உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், 870/21, அரசு அலுவலர் ‘ஆ’ குடியிருப்பு, (தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகம் அருகில்) திருநெல்வேலி – 7 தொலைபேசி எண்:0462-2901890 என்ற முகவரிக்கு செய்தி வெளியிடப்பட்ட நாளிலிருந்து 10 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply