பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் .
பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு தனிநபர் கடன், குழுக்கடன் மற்றும் கல்விக்கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வாயிலாக, ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்குள்ளும், 18 வயது முதல் 60 வயது நிரம்பிய குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் கடனுதவி வழங்கப்படும்.
தனிநபர் தொழில் கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ரூ.1.25 லட்சம் வரை 7 சதவீதம் வட்டி விகிதத்திலும் மற்றும் ரூ.1.25 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை 8 சதவீதம் வட்டி விகிதத்திலும் 3 முதல் 6 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு கடனுதவி வழங்கப்படுகிறது.
குழுக்கள் சுய உதவித் திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் சிறுதொழில் மற்றும் வணிகம் செய்ய ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ1.25 லட்சம் வரையும், குழு ஒன்றுக்கு அதிக பட்சமாக ரூ.25 லட்சம் வரையும் ஆண்டுக்கு 7 சதவீதம் வட்டி விகிதத்தில் 2 1/2 முதல் 3 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு கடனுதவி வழங்கப்படுகிறது. சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் முடிந்திருக்க வேண்டும். இருபாலருக்கான சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு இக்கடனுதவி வழங்கப்படுகிறது.
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டுக்கு ரூ.60,000 வீதம் 2 கறவை மாடுகள் வாங்க 7 சதவீத வட்டி விகிதத்தில் 3 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு கடனுதவி வழங்கப்படுகிறது.
கல்விக்கடன் பெற, விண்ணப்பத்தாரர் பிற்படுத்தப்பட்டோர் / மிகப் பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் வகுப்பினராக இருத்தல் வேண்டும் (சாதிச் சான்றிதழ்). குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 5.00 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும் (கிராமம் / நகர்ப்புறம் பாகுபாடின்றி) (வருமானச் சான்றிதழ்). மாநில அரசின் வருமானச் சான்றிதழ் வழங்கும் தகுதி வாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்டிருக்க வேண்டும் (அல்லது) வர்த்தமானி பதிவு பெற்ற அதிகாரியால்(Gazetted Officer) சான்றளிக்கப்பட்ட சுய சான்றளிக்கப்பட்ட ஆண்டு குடும்ப வருமானச் சான்றிதழ்.
விண்ணப்பதாரர் மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல் படிப்புகள், பிஎச்டி, முதுகலை பட்டப்படிப்புகள் போன்றவற்றில் முதுகலைப் படிப்புகளுக்கு பொருத்தமான அதிகாரியால் அங்கீகரிக்கப்பட்ட தரப்படுத்தப்பட்ட தேர்வு மதிப்பெண்கள் (SAT GMAT, GRE அல்லது பாடநெறியில் சேருவதற்குப் பொருத்தக்கூடிய பிற தொடர்புடைய மதிப்பெண்கள் போன்றவை) மூலம் சேர்க்கையை ஏற்றுக்கொள்ளும் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும் (சம்மந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து சேர்க்கை / சலுகை கடிதத்தை பெற்றிருக்கவேண்டும்) (IELTS அல்லது TOEFL போன்ற முற்றிலும் மொழித் திறன் தேர்வை அடிப்படையாகக் கொண்டதல்ல). கடன் வரம்பு ரூ.25 இலட்சம் வரை. 21 முதல் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆண்டு வட்டி விகிதம் 8% அதிகபட்ச மீட்கும் காலம் 10 ஆண்டுகள்.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி கிளைகளிலும் கடன் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். மேலும், இக்கழக இணையதள முகவரியில் (tabcedco.net) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்துடன் ஜாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வங்கி கோகும் ஆவண நகல்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா . I A S., தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply