வேளாண் பட்டதாரிகள் உழவர் நல சேவை மையம் அமைப்பதற்கு மானிய உதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
விருதுநகர் மாவட்டத்தில் 30சதவீத மானியத்துடன் உழவர் நல சேவை மையம் அமைக்க வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். அதன்படி, வேளாண்மை / தோட்டக்கலை / வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு முடித்த இளைஞர்களின் திறன், விவசாயிகளுக்கு உதவியாக இருந்து, உற்பத்தியை உயர்த்தும் வகையில் உழவர் நலசேவை மையங்கள் 1000 வரை அமைக்க அரசு ரூ.42 கோடி ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ.10 முதல் 20 இலட்சம் மதிப்பில் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க 30 சதவீத மானியமாக ரூ.3 இலட்சம் முதல் 6 இலட்சம் வரை வழங்கப்படும் .
இந்த மையங்களில் உழவர்களுக்கு, தேவையான விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் விற்பனை செய்யப்படுவதோடு, பயிர்களில் ஏற்படும் பூச்சி, நோய் மேலாண்மைக்கு தேவையான மற்றும் நவீன தொழில்நுட்பம் , வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டுதல் குறித்த ஆலோசனை வழங்கப்படும். அத்திட்டத்தில் பயன்பெற வயது 20 முதல் 45-க்குள் இருப்பவர்கள், விரிவான அறிக்கையுடன் வங்கியில் கடன் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
வங்கியில் கடன் ஒப்புதல் பெற்ற பின், மானிய உதவி பெற https://www.tnagrisnet.tn.gov.in/KaviaDP/register என்ற இணையதள முகவரியில் ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த வாய்ப்பை வேளாண் பட்டதாரிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்
0
Leave a Reply