தோட்டக்கலை பயிர்களில் அங்கக சாகுபடி மற்றும் ஏற்றுமதிக்கான தொழில்நுட்பங்கள் குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கு.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (18.02.2026) தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில், தேசிய தோட்டக்கலை இயக்கம் 2025-2026-ன் கீழ், தோட்டக்கலை பயிர்களில் அங்கக சாகுபடி மற்றும் ஏற்றுமதிக்கான தொழில்நுட்பங்கள் குறித்த விவசாயிகளுக்கான இரண்டு நாள் மாவட்ட அளவிலான கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.
உலகளவில் இயற்கை முறையில் உற்பத்தி செய்த விளைபொருட்களுக்கு அதிகளவிலான சந்தை வாய்ப்புகள் இருக்கின்றன. தோட்டக்கலைப் பயிர்களில் இயற்கை முறையில் உற்பத்தி செய்தல், சாகுபடி செய்யப்பட்ட விளைபொருட்களை லாபகரமாக சந்தைப்படுத்துதல், ஏற்றுமதிக்கு உகந்த வேளாண் முறைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.மேலும், விவசாயிகளால் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட விளைபொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு, அங்கக உரங்கள் தயாரிப்பு குறித்து செயல்விளக்கம் விவசாயிகளுக்கு அளிக்கப்படுகிறது. மேலும், அங்கக சாகுபடி மற்றும் ஏற்றுமதிக்கான அரசின் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்தும், தொழில்நுட்பங்கள், இயற்கை முறை உற்பத்தி சான்றிதழ், ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்படவுள்ளன.
எனவே, விவசாயிகள் மற்றும் வணிகர்கள் உற்பத்தி செய்வது, வணிகம் செய்வது, மதிப்புக்கூட்டல், வங்கிக் கடனுதவிகள், ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளிட்டவைகளை நன்கு அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.பின்னர், தோட்டக்கலை அங்கக சாகுபடி மற்றும் ஏற்றுமதிக்கான தொழில்நுட்பம் குறித்த கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார். இக்கருத்தரங்கில், தோட்டக்கலை பயிர்களில் அங்கக சாகுபடி குறித்து வேளாண் அறிவியல் மையப் பேராசிரியர் (தோட்டக்கலை) திரு.பாலசுப்பிரமணியன், திருமதி ஜடாகவிதா (இணை பேராசிரியர்), திரு.நல்லகுரும்பன் (இணை பேராசிரியர்) ஆகியோர் தொழில்நுட்ப உரை வழங்கினர்.
தோட்டக்கலை பயிர்களில் சாகுபடி செய்யப்பட்ட விளைபொருட்களை லாபகரமாக சந்தைப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதிக்கு உகந்த முறையில் நன்னெறி வேளாண் முறைகள் குறித்த தொழில்நுட்ப உரையினை திருமதி மா.செல்வி, வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) மற்றும் திரு.மு.தீபன் சக்ரவர்த்தி (மூத்த நிலை மேலாளர், TNAPEX) ஆகியோர் வழங்கினர்.மேலும், விருதுநகர் மாவட்ட விவசாயிகளால் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட விளைபொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன மற்றும் அங்கக உரங்கள் தயாரிப்பு குறித்த செயல்விளக்கம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் வேளாண்மை இணை இயக்குநர் திரு.பா.மோகனதாஸ் சௌமியன், தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி சூ.சுபாவாசுகி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திருமதி அ.அம்சவேணி, தோட்டக்கலைத் துறை அலுவலர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், நுகர்வோர்கள், ஏற்றுமதி நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply