எண்ணெய் மதிப்பு கூட்டு தொகுப்பு மற்றும் செயல் விளக்கத்திடல் அமைத்திட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
விருதுநகர் மாவட்டத்தில் 2026-27-ஆம் ஆண்டு வேளாண்மைத் துறையின் மூலம் தேசிய சமையல் எண்ணெய்க்கான இயக்கம் என்ற திட்டத்தின்கீழ் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்க மதிப்புக் கூட்டு தொகுப்பு மற்றும் செயல்விளக்கத்திடல் அமைத்திட இலக்கு பெறப்பட்டுள்ளது. இத்திட்டமானது நிலக்கடலை, சூரியகாந்தி போன்ற பயிர்களுக்காக செயல்படுத்தப்படவுள்ளது.
இதில் நிலக்கடலையில் தொகுப்பு மற்றும் செயல்விளக்கத்திடல் காரியாபட்டி, ம.ரெட்டியபட்டி, நரிக்குடி, வத்திராயிருப்பு, விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய வட்டாரங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நிலக்கடலை மதிப்புக்கூட்டு தொகுப்பு 1000 எக்டேர் பரப்பளவில் உருவாக்கி அதில் அடங்கியுள்ள விவசாயிகளுக்கு ஏழு ஆண்டுகளுக்குட்பட்ட புதிய நிலக்கடலை இரகங்கள் வழங்கப்படும். உயர் விளைச்சல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நிலக்கடலை விளைச்சல் அதிகரிக்கப்படும்.
மேலும், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் நிலக்கடலைகளை வாங்கி மதிப்புக் கூடுதலாக எண்ணெய் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நிலக்கடலை செயல்விளக்கத்திடலின் கீழ் 100 எக்டேர் (20 எக்டேர் ஒரு தொகுப்பு) தேர்வு செய்து அனைத்து தொழில்நுட்பங்களையும் உட்புகுத்தி நிலக்கடலை விளைச்சலை உயர்த்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோன்று, சூரியகாந்தி பயிரில்; மதிப்புக்கூட்டு தொகுப்பு (300 எக்டேர்) மற்றும் செயல்விளக்கத்திடல் 100 எக்டேர் (20 எக்டேர் ஒரு தொகுப்பு) விருதுநகர், அருப்புக்கோட்டை, ம.ரெட்டியபட்டி ஆகிய வட்டாரங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயனடைந்து எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply