இராஜபாளையம் வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கள ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர்திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் (16.09.2026) கள ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் அரசின் மூலம் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டம் முகாமானது16.09.2026 காலை 09.00 மணி முதல் மறுநாள் 17.09.2026 அன்று காலை 09.00 மணி வரை நடைபெற்று வருகிறது.
முதல் நாளான இன்று(16.09.2026) இராஜபாளையம் நகராட்சி பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், திடக்கழிவுகளை மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து நுண் உரம் தயாரிக்கும் பணிகள், புதிதாக கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையத்தின் கட்டுமானப் பணிகள், இராஜபாளையம் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கி, வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், கீழ் சேத்தூர் சேவுக பாண்டியன் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு உள்ளிட்ட இடங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.
இராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் சுகாதாரத்தை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் தமிழ்நாடு அரசு சார்பில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் (Sewage Treatment Plant - STP) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இராஜபாளையம் நகரின் 11.36 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் 3 மண்டலங்களாக பிரித்து அங்கிருந்து பெறப்படும் கழிவு நீரை சுத்திகரித்து, மறுசுழற்சி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.இந்த சுத்திகரிப்பு நிலையம் தினமும் 21.85 MLD (2 கோடியே 18 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர்) கழிவு நீரை சுத்திகரிக்கும் திறன் கொண்டது. 2050-ம் ஆண்டு வரையிலான மக்கள் தொகையினை அடிப்படையாகக் கொண்டு கூடுதல் கழிவு நீரை சமாளிக்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் உள்ள 42 வார்டுகளில் 47,497 வீடுகள் மற்றும் 5,876 வணிக வளாகங்களில் இருந்து நாள்தோறும் 26.84 மெட்ரிக் டன் மக்கும் குப்பை, 21.66 மெட்ரிக் டன் மக்காத குப்பை என மொத்தம் 48.5 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகளை நுண் உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும் மக்காத குப்பைகளை தொழிற்சாலைகளுக்கு அளிக்கப்படுகிறது.இராஜபாளையம் நகராட்சியில் ரூ.2.15 கோடி மதிப்பில் மாணவர்கள், போட்டித் தேர்வு எழுதுவோர் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அறிவு சார் மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
இராஜபாளையத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பாக 7400 மெ.டன் கொள்ளளவு கொண்ட 6 கிடங்குகள் வாடகைக்கு எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இக்கிட்டங்கியில் BR Grade A Rice - 1736 MTs, BR Grade C Rice - 694 MTs, Raw Paddy Grade A - 230 MTs, Raw Paddy Grade C - 1117 MTs உள்ளிட்ட பொருட்கள் தற்போது இருப்பில் உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.அதனை தொடர்ந்து, இராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6400/- மதிப்பிலான 3 காதொலிக்கருவிகளையும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1400/- மதிப்பிலான மடக்குக்குச்சி என மொத்தம் ரூ.22,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர், நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அனைத்து ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலைப் பணிகள், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் உரிய பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்வது குறித்து அனைத்து அரசு அலுவலர்களுடன் கலந்துரையாடி அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தினை மேம்படுத்தவும் அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திருமதி வானதி, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான் I A S., மண்டல மேலாளர் (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்) திரு.பால்பாண்டி, இராஜபாளையம் நகராட்சி ஆணையர் (பொ) திரு.கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) திருமதி அம்சவேணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் , அனைத்துத் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply