சர்வதேச யோகா தினம் நிகழ்ச்சி -2026 மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை, சார்பில்(21.06.2026) சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற யோகா பயிற்சி நிகழ்வினை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S ., அவர்கள் தொடங்கி வைத்தார்.யோகா என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல அது உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து ஆரோக்கியமான வாழ்க்கையை உருவாக்கும் ஒரு சிறந்த வாழ்க்கை முறையாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலக மக்களுக்கு நல்வாழ்வை அளித்து வரும் யோகா, இன்று உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஒரு அரிய கலையாக திகழ்கிறது.
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் மன அழுத்தம், உடல் சோர்வு, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய சூழலில், யோகா உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி அளித்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வழிகாட்டுகிறது.யோகா என்பது ஏதோ நேற்று உருவான கலை அல்ல. இது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது சித்தர்களாலும், முனிவர்களாலும் கண்டறியப்பட்டு, வளர்க்கப்பட்ட ஒரு வாழ்வியல் அறிவியல் (Science of Living).
இந்த ஆண்டின் சர்வதேச யோகா தினக் கருப்பொருளான “ஆரோக்கியமான முதுகெலும்பிற்கான யோகா” என்பது மிகவும் பொருத்தமானதாகும். நமது உடலின் முக்கிய ஆதாரமாக இருக்கும் முதுகெலும்பின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் யோகா முக்கிய பங்கு வகிக்கிறது. தொடர்ந்து யோகா பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடல் நெகிழ்வுத்தன்மை அதிகரிப்பதுடன், மன அமைதியும் கிடைக்கிறது.
இன்றைய இளைய தலைமுறையினர், குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், தொழில்நுட்ப உலகில் மூழ்கி, போதிய உடற்பயிற்சியின்றி 'மன அழுத்தம்' (Stress) மற்றும் 'பதற்றம்' (Anxiety) போன்ற சவால்களைச் சந்தித்து வருகின்றனர்.பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் யோகாசனத்தை ஒரு பாடமாகவோ அல்லது தினசரி பயிற்சியாகவோ கொண்டு வர வேண்டியது காலத்தின் கட்டாயம். யோகா செய்யும் ஒரு மாணவனின் கவனம் (Focus) கூடுகிறது, நினைவாற்றல் (Memory power) அதிகரிக்கிறது, எல்லாவற்றிற்கும் மேலாக உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் நிதானம் கிடைக்கிறது.
அதேபோல், நீரிழிவு நோய் (Diabetes), ரத்த அழுத்தம் (BP), இதயம் சார்ந்த கோளாறுகள் போன்ற வாழ்வியல் நோய்களுக்கு (Lifestyle diseases) மருந்து மாத்திரைகளைத் தாண்டி யோகா ஒரு சிறந்த இயற்கை நிவாரணியாகச் செயல்படுகிறதுஎனவே, மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் அனைவரும் தினமும் குறைந்தது 30 முதல் 45 நிமிடங்கள் வரை யோகா பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இது உடல்நலத்தை மட்டுமல்லாமல், தன்னம்பிக்கை, கவனத்திறன் மற்றும் செயல்திறனையும் மேம்படுத்தும்.
யோகாவை ஒரு நாள் நிகழ்வாக மட்டும் கருதாமல், அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க ஒவ்வொருவரும் யோகா பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.இந்த யோகா தின விழாவில் ஆர்வமுடன் பங்கேற்ற மாணவ,மாணவியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.இந்நிகழ்வில் மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply