சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் உயிர் - பட்டாசு தொழிலாளர் குடும்ப நலன் மற்றும் மறுவாழ்வு அறக்கட்டளையினை தொடங்கி வைத்தார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள் முன்னிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு திட்டமான உயிர் திட்டத்தின் கீழ் பட்டாசு தொழிலாளர் குடும்ப நலன் மற்றும் மறுவாழ்வு அறக்கட்டளையினை (10.09.2026) தொடங்கி வைத்தார்.பின்னர், பட்டாசு வெடி விபத்தில் பெற்றோரை இழந்த 83 மாணவர்களுக்கு புத்தகப்பை, நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்களை வழங்கினார். மேலும், விருதுநகர் கல்வி அறக்கட்டளையின் மூலம் 4 மாணக்கர்களுக்கு ரூ.18,864 மதிப்பிலான உயர் கல்வி கட்டணத்திற்கான காசோலைகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு உற்பத்தித் தொழில் பல்வேறு குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது. இத்தொழிலில் எதிர்பாராதவிதமாக ஏற்படும் விபத்துகளினால் சில நேரங்களில் தொழிலாளர்கள் உயிரிழப்பதோடு, அவர்களது குடும்பங்கள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, குடும்பத்தின் முதன்மை வருவாய் ஈட்டும் நபரை இழந்த குடும்பங்கள், ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள் மற்றும் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் தொடர்ந்து கல்வி, மருத்துவம், வாழ்வாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இத்தகைய குடும்பங்களின் துயரங்களைப் போக்கி, அவர்களுக்கு தேவையான உதவிகளை ஒருங்கிணைத்து வழங்குவதற்காக, விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் “உயிர் -பட்டாசு தொழிலாளர் நலன் மற்றும் மறுவாழ்வு அறக்கட்டளை”தொடங்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம், பட்டாசு தொழிற்சாலை விபத்துகளினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான பல்வேறு துறைகளின் வாயிலாக ஒருங்கிணைந்த உதவிகளை வழங்கி, அவர்கள் மீண்டும் நிலையான மற்றும் கண்ணியமான வாழ்க்கையை மேற்கொள்ள வழிவகை செய்வதாகும்.இவ்வறக்கட்டளையின் வாயிலாக, விபத்துகளினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தற்போதைய தேவைகள் மட்டுமின்றி, அவர்களின் நீண்டகால நலன் மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
குறிப்பாக, பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் கல்வி இடைநிற்றலைத் தடுப்பது, அவர்களின் பள்ளி மற்றும் உயர்கல்விக்குத் தேவையான உதவிகளை வழங்குவது, தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி பயில்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவது, மருத்துவ உதவிகள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.மேலும், குடும்பத்தின் வருவாய் ஈட்டும் நபரை இழந்த குடும்பங்கள் மற்றும் ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், அவர்களின் திறன் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப தொழிற்பயிற்சி, சுயதொழில் வாய்ப்புகள், வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளுக்கு தேவையான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் பயன்களைப் பெற்றுத்தருவதுடன், சமூகப் பாதுகாப்பு சார்ந்த உதவிகள், கல்வி உதவிகள், மருத்துவ உதவிகள் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழங்குவதற்கும் இவ்வறக்கட்டளை வழிவகுக்கும்.
இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டதன் மூலம், மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலை விபத்துகளினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரண உதவிகளைத் தாண்டி, நீண்டகால கல்வி, மருத்துவம், வாழ்வாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு சார்ந்த ஒருங்கிணைந்த மறுவாழ்வு ஆதரவு கிடைக்கும் வகையில் புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில் சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், பட்டாசு தொழிற்சாலை நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply