சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்அவர்கள் மாநிலம் முழுவதும் 43,600 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தி சீதனப் பொருட்கள் வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் சமுதாய வளைகாப்பு விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் (10.09.2026) மாநிலம் முழுவதும் 43,600 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு நடத்தி சீதனப் பொருட்கள் வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வசதி வாய்ப்பற்ற பெண்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும், ஆரோக்கியம் மற்றும் சுகாதாரமான வாழ்விற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஒரு அண்ணனாகவும் குழந்தைகளுக்கு ஒரு தாய் மாமனாகவும் இருந்து திட்டங்களை அறிவித்து வருகிறார்கள்.
ஒரு குழந்தையின் வளர்ச்சி, கருவாக உருவான நாளிலிருந்தே ஆரம்பமாகிறது. இதனை மனதிற்கொண்டு கர்ப்பிணி பெண்கள், கர்ப்பகாலத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால் தான், அவர்களுக்கு பிறக்கும் குழந்தை ஆரோக்கியமான, அறிவான குழந்தையாக இருக்கும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அறிவியல் பூர்வமான நிகழ்ச்சியே இந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி.வசதி வாய்ப்பு குறைவால் இந்த நிகழ்ச்சியை நடத்த முடியாத குடும்பத்தில் உள்ள கர்ப்பிணிகளுக்கு இந்த வாய்ப்பும் நன்மையும் கிடைக்காமல், அவர்களின் குழந்தைகள் பாதிக்கப்படக் கூடாது என்ற தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பான திட்டம் இந்த வளைகாப்பு திட்டமாகும். சாதி மத வேறுபாடின்றி அனைத்து கர்ப்பிணி தாய்மார்களும் இந்த திட்டத்தால் பயன்பெற்று வருகிறார்கள்.
கர்ப்பிணி பெண்கள் பாதுகாப்பான தாய்மையை உறுதி செய்தல், கர்ப்பகால பராமரிப்பு குறித்த தகவல்கள் கர்ப்பிணித் தாய்மார்களை சென்றடைய செய்து, அவர்கள் அதை பின்பற்றுவதை உறுதி செய்தல், கர்ப்பிணிகள் இறப்பு விகிதத்தை குறைத்தல், சிசு மரணத்தை குறைத்தல், ஆரோக்கியமான அறிவான குழந்தைகள் பிறப்பதை உயர்த்துதல், குழந்தைகளின் பிறப்பு எடை 3 கிலோவாக இருக்க வேண்டியதின் அவசியத்தை உணர்த்துதல், கர்ப்பகாலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அதற்கான தீர்வுகள் குறித்து விழிப்புணர்வு எற்படுத்துதல், தாய்ப்பாலின் அவசியம், நன்மைகள், இணை உணவின் அவசியம், குழந்தைகள் நோய் வாய்ப்படும் போது அளிக்கப்பட வேண்டிய கவனிப்பு போன்ற பல விவரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக் கொள்ள வேண்டியதின் அவசியத்தை உணர்த்துதல், குழந்தைகளின் வளர்ச்சிப் படிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மகப்பேறு உதவித் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 43,600 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது .விருதுநகர் மாவட்டத்தில் 1200 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.முதற்கட்டமாக இராஜபாளையம் நகர் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதன பொருட்கள் இன்று வழங்கப்பட்டுள்ளது.எனவே, இந்த வளைகாப்பு விழாவில் கலந்து கொண்ட வருங்கால சந்ததியரை உருவாக்கும் அனைத்து கர்ப்பணிதாய்மார்களும், இந்த கர்ப்பகாலத்தில் ஊட்டச்சத்து உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமான குழந்தைகளை பெற்று, வளமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் தெரிவித்தார்.
இவ்விழாவில், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான, இ.ஆ.ப., இணை இயக்குநர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்) திருமதி அன்பு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி, இராஜபாளையம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி பங்கஜம், உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply