இசைக்குயில் எஸ். ஜானகி மறைவு: இசை உலகின் பொற்காலம் முடிந்தது.
தென்னிந்திய திரையுலகின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகியும், ரசிகர்களால் 'இசைக்குயில்' என்று போற்றப்பட்டவருமான எஸ். ஜானகி (88), உடல்நலக்குறைவு காரணமாக கர்நாடக மாநிலம் மைசூருவில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர், இசைக் கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
1938 ஏப்ரல் 23-ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் ராமமூர்த்தி – சத்தியவதி தம்பதியருக்கு மகளாகப் பிறந்த ஜானகி, சிறுவயதிலேயே இசையில் ஆர்வம் கொண்டு நாதஸ்வர மேதை பைடிசாமியிடம் முறையாக இசை பயின்றார். 1956-ஆம் ஆண்டு வானொலி இசைப் போட்டியில் வெற்றி பெற்று, அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்திடம் பரிசு பெற்றது, அவரது இசைப் பயணத்தின் முக்கிய தொடக்கமாக அமைந்தது.
திரையுலகில் அறிமுகமான முதல் ஆண்டிலேயே ஆறு மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி கவனம் ஈர்த்தார். 'கொஞ்சும் சலங்கை' திரைப்படத்தில் எஸ்.எம். சுப்பையா நாயுடு இசையில் அவர் பாடிய 'சிங்கார வேலனே தேவா' பாடல், இன்று வரை தமிழ் இசையின் காலத்தால் அழியாத பாடல்களில் ஒன்றாக திகழ்கிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட 17 மொழிகளில் 48 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடி, இந்திய இசை வரலாற்றில் தனக்கென அழியாத முத்திரை பதித்தார். குழந்தையின் மழலைக் குரல் முதல் முதியவரின் குரல் வரை பல்வேறு குரல் வடிவங்களில் பாடும் அபார திறமை அவருக்கே உரியது.
நான்கு முறை தேசிய விருது பெற்ற ஜானகி, தமிழில் 'செந்தூரப்பூவே...' (பதினாறு வயதினிலே) மற்றும் 'இஞ்சி இடுப்பழகா...' (தேவர் மகன்) உள்ளிட்ட பாடல்களுக்காக தேசிய அங்கீகாரம் பெற்றார். 2013-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதை ஏற்க மறுத்ததும் குறிப்பிடத்தக்கது.
மேலும், கேரள அரசு விருது 11, ஆந்திர அரசு விருது 9, தமிழக அரசு விருது 6, ஒடிசா அரசு விருது 1, பிலிம்பேர் விருதுகள் 20 மற்றும் இலங்கையின் 'ஞான கான சரஸ்வதி' உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.
2016-ஆம் ஆண்டு பாடகியாக இருந்து ஓய்வு பெற்ற எஸ். ஜானகி, தனது இனிமையான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார். அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.
0
Leave a Reply