மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணிகளுக்கான போட்டித் தேர்வில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டு தோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் குடிமைப்பணிகளுக்கான போட்டித் தேர்வில் கலந்துகொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கப்பட்டது.விருதுநகர் மாவட்டத்தில் மீனவ சமுதாயத்தைச் சார்ந்த உள்நாட்டு மீனவ கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இச்சிறப்பு பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் 2025-26-ம் ஆண்டிற்கு பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பபடிவம் (Application Form) மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை (Guidelines) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது விருதுநகர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அலுவலக வேலை நாட்களில் நேரில் தொடர்பு கொண்டு விலையின்றி பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பதாரர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணையதளத்தில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து, 25.11.2025-க்குள் விருதுநகர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு உதவி இயக்குநர் அலுவலகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, 114 B27/1, வேல்சாமி நகர், விருதுநகர் - 626-001. தொலைபேசி எண். : 04562-244707 மற்றும் விருதுநகர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,. அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply