தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கத்தின் கீழ் சமுதாய வளப் பயிற்றுநர் பணியிடங்களுக்கு தகுதியான சுய உதவிக்குழு பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்
விருதுநகர் மாவட்டம் 2025-26-ஆம் ஆண்டு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கத்தின் கீழ் செயல்படும் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் (CMTC) காலியாகவுள்ள சமுதாய வளப் பயிற்றுநர் பணியிடங்களுக்கு பணியாளராக பணி அமர்வு செய்திட தகுதியான சுய உதவிக்குழு பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்பில் 29.09.2025 அன்று மாலை 05.45 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.
சமுதாய வளப் பயிற்றுநர்களுக்கான கீழ்கண்ட தகுதிகள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்:
குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்தது இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை, பயிற்சி நடத்துவதற்கு தேவையான உடற்தகுதி மற்றும் திறன் இருந்தால் மட்டும் போதுமானது. சுய உதவிக் குழுவில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்.மாவட்ட, வட்டார மற்றும் ஊராட்சி அளவிலான பயிற்சிகளில் குறைந்தது 5 முதல் 10 பயிற்சிகளிலாவது கலந்து கொண்டிருக்க வேண்டும். கைபேசி செயலிகளை பயன்படுத்த தெரிந்தவராக இருத்தல் வேண்டும். சமுதாய வளப் பயிற்றுநராக விண்ணப்பிக்கும் போது சுய உதவிக் குழு சார்ந்த வாராக்கடன் நிலை இல்லாது இருக்க வேண்டும்.சமுதாய வளப் பயிற்றுநராக செயல்படுவதற்கு குடும்ப ஒத்துழைப்பு இருத்தல் வேண்டும். அரசியலில் முக்கிய பொறுப்பில் இல்லாதவராகவும், தனியார் நிறுவனங்களில் முழு நேரமாகவோ (அ) பகுதி நேரமாகவோ பணிபுரிபராகவோ இருக்கக் கூடாது.
விண்ணப்பதாரர் தொடர்புடைய குழுவிலிருந்து சமுதாய வளப்பயிற்றுநராக பரிந்துரைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றி, அத்தீர்மான நகலை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். சமுதாய வளப் பயிற்றுநர் மாதிரி விண்ணப்படிவம் தொடர்புடைய ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்பில் பெற்றுக்கொள்ளலாம்.மேலும், பயிற்சி நடைபெறும் போது மட்டும் பயிற்சி நடத்தியதற்கான மதிப்பூதியம் வழங்கப்படும். மாதாந்திர மதிப்பூதியம் வழங்கப்படாது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும். நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. ஒப்பந்த பணியாளராக பணியமர்வு செய்வதால் பணி நிரந்தரம் குறித்து உரிமை கோர முடியாது. மேலும் தொடர்புக்கு மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, அலுவலக தொலைபேசி எண் 04562-252036, உதவித் திட்ட அலுவலர் (CB), அலைபேசி எண் : 8778130177 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply