முன்னேற விழையும் மாவட்டம்(Aspirational District) தொடர்பாக நடைபெற்று வரும் பணிகள் குறித்து தொடர்புடைய அரசுத்துறை உயர் அலுவலர்களிடம் ஆய்வு.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்(07.11.2025) முன்னேற விழையும் மாவட்டம் (Aspirational District) தொடர்பாக நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் முன்னிலையில், கூடுதல் செயலாளர் (இந்திய அரசின் கல்வி அமைச்சகம் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை) / மத்திய பொறுப்பு அலுவலர் (Central Prabhari Officer) திரு.ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல், I A S., அவர்கள் அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.மத்திய அரசு நிதி ஆயோக் அமைப்பினால் பொது சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, வேளாண்மை, நிதி உள்ளடக்கம் மற்றும் திறன் மேம்பாட்டு, அடிப்படை உட்கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் 112 முன்னேற விழையும் மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளையும் ஒருங்கிணைத்து முற்றிலும் வளர்ச்சியடைந்த மாவட்டமாக மாற்றுவது தான் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
விருதுநகர் மாவட்டத்தில் பொது சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, வேளாண்மை, நிதி உள்ளடக்கம் மற்றும் திறன் மேம்பாட்டு, அடிப்படை உட்கட்டமைப்பு ஆகியவற்றில் தனிக்கவனம் செலுத்தி அந்த துறைகளை முன்னேற்ற பாதையில் எடுத்து செல்வதற்கு அலுவலர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஒன்றிய அரசினால் முன்னேற விழையும் மாவட்டங்களாக(Aspirational District) தேர்வு செய்யப்பட்டுள்ள மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஒன்றிய, மாநில அமைச்சர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.அதன் ஒரு பகுதியாக கூடுதல் செயலாளர் (இந்திய அரசின் கல்வி அமைச்சகம் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை) / மத்திய பொறுப்பு அலுவலர் (Central Prabhari Officer) திரு.ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல்,இ.ஆ.ப., அவர்கள் முன்னேற விழையும் மாவட்டங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள காரணிகள் மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து கேட்டறிந்து, காரணிகளின் மீது தனிக்கவனம் செலுத்தி, இந்த காரணிகளின் தரத்தினை மேம்படுத்த தொடர்புடைய துறைத்தலைவர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள ரத்தசோகை குறைபாடு உள்ள 56 சதவீதம் பள்ளிக் குழந்தைகளின் முன்னேற்றம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து, மாவட்டத்தில் உள்ள ரத்தசோகை குறைபாடு உள்ள பெண் குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு இரத்த சோகை குறைபாட்டை போக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.விருதுநகர் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக பேறு காலத்தில் ஏற்படும் சிசு மரண விகிதம் வெகுவாக குறைந்ததை பாராட்டினார்.மாவட்டத்தில் உயர்கல்வி சேர்க்கை விகிதம் அதிகமாக இருப்பதை பாராட்டி, இந்த சதவிகிதம் வருங்காலங்களில் குறையாமல் இருப்பதற்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை தொடர்புடைய அலுவலர்களுக்கு வழங்கி, தொடர் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.அருப்புக்கோட்டை வட்டாரப் பகுதிகளில் விவசாய நிலங்களில் காட்டுக் பன்றிகளால் ஏற்படக்கூடிய இழப்புகளை தடுப்பதற்கு அறிவியல் பூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறும், திருச்சுழி மற்றும் நரிக்குடி வட்டாரப்பகுதிகளில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறும் தொடர்புடைய அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.
மேலும் திறன் வளர்ச்சி துறை மூலமாக கொடுக்கப்பட்டு வரும் பயிற்சிகளை நவீனப்படுத்துமாறும், செயற்கை நுண்ணறிவு, ட்ரோன் டெக்னாலஜிஸ் மற்றும் டேட்டா சயின்ஸ் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பம் தொடர்பாகவும் பயிற்சி வழங்கும்படி தொடர்புடைய அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார். தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதாரத்தின் சார்பாக மகளிர் சுய உதவி குழுக்கள் மூலமாக புதுமையான பொருட்களை தற்போதுள்ள கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு உற்பத்தி செய்து அவர்களுடைய வாழ்வாரத்தை உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பாக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக அளவில் மானிய கடன் வழங்கியதற்காக பாராட்டி, சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கி அவர்களுடைய தொழில் வளர்ச்சிக்கு உதவுமாறு தொடர்புடைய அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார். முன்னேற விழையும் மாவட்டத்தின் கீழ், தனித்தனியாக ஆய்வு செய்து மாவட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடர்ந்து கண்காணித்து, முன்னேற விழையும் மாவட்டத்தின் கீழ் உள்ள அனைத்து குறியீடுகளிலும் தனிக்கவனம் செலுத்தி பணிகளை துரிதபடுத்தி, மாவட்டத்தின் முழுமையான வளர்ச்சிக்கு சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்கள் முழுமையான ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தெரிவித்தார்.
முன்னதாக விருதுநகர், கன்னிச்சேரிபுதூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தினை நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள், மருந்துகளின் இருப்பு, மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கை, பயன்பெறும் கிராமங்களின் எண்ணிக்கை உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர், மருத்துவமனையில் மகப்பேறு அடைந்த கர்ப்பிணித்தாய்மார்களுக்கு தாய் சேய் நல பரிசு பெட்டகங்கள், மற்றும் பிறப்புச் சான்றிதழ்களையும், வளரிளம் பெண்களுக்கு இரும்புச் சத்து குறைபாட்டை சரி செய்யும் வகையில் இரும்புச்சத்து மற்றும் ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் அடங்கிய தொகுப்பினையும் கூடுதல் செயலாளர் (இந்திய அரசின் கல்வி அமைச்சகம் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை) / மத்திய பொறுப்பு அலுவலர் (Central Prabhari Officer) அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வுகளில் திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், மாவட்ட சுகாதார அலுவலர்(விருதுநகர்) மரு.யசோதாமணி, வட்டார மருத்துவ அலுவலர் மரு.ஆரோக்கிய ரூபன்ராஜ், அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply