சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் (19.05.2026) மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை, சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கூட்டுத் தூய்மைப் பணித் தொடக்கம்:
அதன் ஒரு பகுதியாக, சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் அறிவியல் பூர்வமான கழிவு மேலாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும், மாநகராட்சி முழுவதும் தூய்மையைப் பேணுவதில் குடிமக்களின் பங்களிப்பை உறுதி செய்யும் பொருட்டும், 'தூய்மைத் திருவிழா-2026' என்ற தலைப்பில் நடைபெற்ற மாபெரும் கூட்டுத் தூய்மைப் பணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
பொது சுகாதார வளாக ஆய்வு மற்றும் அறிவுரைகள்:
அதனைத் தொடர்ந்து, சிவகாசி பேருந்து நிலையத்தில் தற்போது செயல்பட்டு வரும் பொது சுகாதார வளாகத்தின் (Public Restroom/Sanitation Complex) நிலை மற்றும் தூய்மைத் தன்மை குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், மாநகராட்சியில் உள்ள பொது சுகாதார வளாகங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் தூய்மை செய்து, பொதுமக்களின் சுகாதாரத்தினை உறுதி செய்ய வேண்டும் எனத் தொடர்புடைய அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்.
மதுபானக் கடை அகற்றம் உறுதி செய்தல்:
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களைச் சுற்றி 500 மீட்டர் சுற்றளவிற்குள் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (TASMAC) மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் அரசால் மூடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சிவகாசி பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வந்த மதுபான சில்லறை விற்பனைக் கடை முழுமையாக அகற்றப்பட்டுள்ளதை உறுதி செய்யும் பொருட்டு, மாவட்ட ஆட்சியர் அவர்கள் அந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து உறுதி செய்தார்.
இந்நிகழ்வின் போது, சிவகாசி மாநகராட்சி ஆணையர் திரு. சரவணன், அரசு அலுவலர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
0
Leave a Reply