விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குந்தலப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சிறப்பு பார்வையாளராக பங்கேற்றார்.
இந்திய திருநாட்டின் 80-வது சுந்திரதினத்தை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குந்தலப்பட்டி கிராமத்தில் (15.08.2026) நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் சிறப்பு பார்வையாளராக பங்கேற்றார்.
இக்கூட்டத்தில், தூய்மைப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். பின்னர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 2 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு தாது உப்புக்கலவைகளையும், தோட்டக்கலைத்துறையின் மூலம் 3 பயனாளிகளுக்கு மரக்கன்றுகள், விதைகளையும், 5 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1.60 இலட்சம் மதிப்பில் கடன் உதவிகளையும் என மொத்தம் 15 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
அரசு என்பது எல்லா மக்களையும் சமமாக பார்த்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரும் ஒரு அமைப்பாகும். இந்த கிராம சபையின் மிக முக்கிய நோக்கம் என்னவென்றால், ஜனநாயக நாட்டில், கிராமத்தில் ஊராட்சி தலைவர்கள், மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், அரசுத் துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர்கள் இருப்பார்கள். நாங்கள் எல்லாம் மக்களின் பணியாளர்கள். எங்களுக்கு கிடைக்கப்பெற்ற அதிகாரம் உங்களிடம் இருந்து பெறப்பட்டது. உண்மையான அதிகாரம் மக்களிடம் தான் உள்ளது. அதனடிப்படையில் இந்த கிராமசபை கூட்டத்தின் வாயிலாக இந்த கிராமத்தின் வளர்ச்சிக்கு தேவையான பணிகள் அரசு மூலம் என்னென்ன வளர்ச்சி பணிகள் முடிக்கப்பட்டுள்ளது, என்னென்ன பணிகள் நடைபெற்று வருகிறது, இன்னும் என்னென்ன தேவைகள் உள்ளது என்பது கிராம மக்கள் வாயிலாக அறிந்து அதை செயல்படுத்துவது தான் இதன் நோக்கம்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழக அரசானது அனைத்துத் துறைகளிலும் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தற்போது ஒவ்வொரு கிராமத்திலும் வெற்றி இல்லம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு வீட்டிற்கு ரூ.5 இலட்சம் வரை நிதி உதவி வழங்கப்பட உள்ளது. வீடு இல்லாமல் இடம் வைத்துள்ளவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம். அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை அறிந்து பொதுமக்கள் தங்களது கிராமத்தின் அடிப்படைத் தேவைகளையும், வளர்ச்சிக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவித்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அங்கன்வாடி மையம், வாறுகால் சுத்தம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த கிராம சபைக் கூட்டத்தில், 01.04.2025 முதல் 15.08.2026 வரையிலான கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் திட்டம், இதர பொருட்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும், பொதுசுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கால்நடைதுறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் தங்கள் துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து தெரிந்து கொள்ளும் விதமாக விரிவாக எடுத்துரைத்தனர்.
அதனை தொடர்ந்து, குழந்தை தொழிலாளர் மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பான உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.இந்த கிராம சபைக் கூட்டத்தில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திருமதி வானதி, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) (பொ) திரு.பாலசுப்பிரமணியன், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், அரசு அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply