திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் வீரக்குடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், வீரக்குடி கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் (09.04.2025) நடைபெற்றது.
இம்முகாமில், 25 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா ரூ.8,18,100/- மதிப்பிலும், 100 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளையும், 50 பயனாளிகளுக்கு உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அடையாள அட்டையினையும், 50 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும் என மொத்தம் 225 பயனாளிகளுக்கு ரூ.8.18 இலட்சம் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்கள் பற்றியும்; அதற்கான தகுதிகள் பற்றியும் அனைத்து பொதுமக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இம்முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் தங்கள் துறை சார்ந்து என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பதை எடுத்துரைத்து, அனைத்து திட்டங்களையும் கடைக்கோடி கிராமங்களில் வாழும் ஏழை, எளிய மக்களும் அறிந்து தெரிந்து கொண்டு எவ்வித சிரமமின்றி அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தகுதியான மக்கள் பெற்று பயன்பெற வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்தை தேர்வு செய்து, அதனடிப்படையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது.
மேலும் இந்த மக்கள் தொடர்பு முகாமில் அரசினுடைய திட்டங்களை மக்கள் அறிந்து கொள்கிற வகையில் பல்வேறு அரசுத் துறைகள் மூலமாக கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் பொது மக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.
ஏழை எளிய கிராமப்புற மக்கள் தமக்கான சந்தேகங்களை போக்கிக் கொண்டு, அறிவியல் பூர்வமாக தெரிந்து கொண்டு பயன்பெறுவதே இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதின் நோக்கம். தமிழ்நாடு அரசு மூலம் ஒவ்வொரு துறையின் மூலமாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.நமது மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களைச் சார்ந்த பெண்கள் ஏறத்தாழ 1.10 இலட்சம் பேர் இருக்கிறார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் மூலமாக பல்வேறு பொருளாதார வளர்ச்சிகள் அடைய வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு பல்வேறு தொழிற்பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தொழிற்பயிற்சிகள் மட்டுமல்லாமல் அவர்களுக்கென்று பல்வேறு துறைகளின் சார்பாக அதிகமான கடன்களையும் வழங்கி வருகிறது. நமது மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த பெண்களுக்கு தொடர்ச்சியாக கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கடனை பெற்று நீங்கள் அனைவரும் அதனை முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் அனைவரும் கடனை பெற்று அதனை நல்ல முறையில் முதலீடு செய்து அதிலிருந்து வருமானம் பெற்று, கடனையும் அடைத்து, வாழ்வாதாரத்தையும் பார்த்து கொள்ள வேண்டும்.பெண்ணிற்கு கல்வி கற்பதற்கான முழு சுதந்திரம், விரும்பிய இடத்திற்கு செல்வதற்கான சுதந்திரம் இப்படி எத்தனை சுதந்திரம் இருந்தாலும், பெண்களுக்கான உண்மையான சுதந்திரம் என்பது அவர்களுடைய பொருளாதார சுதந்திரம் தான். தன்னுடைய பொருளாதாரத்திற்கு மற்றவர்களை சார்ந்து இருக்கக்கூடாது. எனவே, பெண்களுக்கான சுதந்திரமும், வலிமையும் இருந்தாலும், இன்றைய நவீன சூழலில் பெண்களுக்கான வலிமை என்பது இருக்கக்கூடிய பல்வேறு தொழில் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்பது தான். அதற்கு தான் அரசு பல்வேறு வாய்ப்புகளை செய்து வருகிறது. நீங்கள் அனைவரும் புதிய பயிற்சிகளை பெற்று, கடனுதவிகள் பெற்று, தன்னம்பிக்கையோடு முன்னேறக்கூடிய பொருளாதார வலிமை மிகுந்த பெண்களாக நமது பெண்கள் இருக்க வேண்டும்.
இந்தியாவிலேயே பள்ளிப்படிப்பை முடித்து விட்டு, கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்றால் அது நமது மாவட்டம் தான். இந்தியாவில் இருக்கக்கூடிய மாவட்டங்களிலே முதல் மாவட்டமாக இருக்கிறது.கிராமப்புறங்களில் இன்றளவும் கூட பெண்கள் 12 வகுப்பு முடித்தாலே போதும் என்ற மனநிலை உள்ளது. இதனை மாற்றி அனைவரும் பெண்களுக்கான உயர்கல்வியை உறுதிசெய்ய வேண்டும். இன்று பெண்கள் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயலாற்றி வருகிறார்கள். பெண்களின் உயர்கல்விக்காக புதுமைப்பெண் மற்றும் மாணவர்களுக்காக தமிழ் புதல்வன் போன்ற திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
எனவே, இது போன்ற திட்டங்களை எல்லாம் நன்கு பயன்படுத்திக்கொண்டு, அனைவரும் பல்வேறு தொழில் வாய்ப்புகளை பெற வேண்டும். தங்களுடைய திறன்களை வளர்த்துக்கொண்டு பல்வேறு அரசு பணிக்கும், தனியார் பணிக்கும் சென்று, அதிகம் சம்பளம் தரக்கூடிய வேலைகளை பெற்று உங்களுடைய வாழ்க்கையும், உங்கள் குடும்பமும் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு அரசு துறைகள் மூலமாக அமைக்கப்பட்ட அரசு திட்டங்கள் சார்ந்த அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.இந்நிகழ்ச்சியில், பல்வேறு அரசு துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply