பயிர் சாகுபடியில் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் பயன்பாட்டினை குறைப்பது குறித்து விவசாயிகளுக்கு நடைபெற்ற தொழில்நுட்ப கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டாரம், பருத்தி ஆராய்ச்சி மையத்தில் பயிர் சாகுபடியில் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் பயன்பாட்டினை குறைப்பது குறித்து விவசாயிகளுக்கு நடைபெற்ற தொழில்நுட்ப கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் (19.08.2026) தொடங்கி வைத்தார்.
இக்கருத்தரங்கில் கிஸான் மேளா/வேளாண்மை உழவர்நலத்துறை திட்டங்கள் குறித்த விவசாயிகளுக்கான கருத்துக் காட்சி மற்றும் கண்காட்சிகளும் அமைக்கப்பட்டிருந்தது. கிஸான் மேளாவில் திருவில்லிபுத்தூர் வட்டாரத்தில் 50 விவசாயிகள், இராஜபாளையம் வட்டாரத்தில் - 25 விவசாயிகள்,வத்திராயிருப்பு வட்டத்தில் - 25 விவசாயிகள், சிவகாசி வட்டாரத்தில் -25 விவசாயிகள், மற்றும் வெம்பக்கோட்டை வட்டாரத்தில் -25 விவசாயிகள் என ஆக மொத்தம் 150 - விவசாயிகள் பங்கேற்றனர்.விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மைதுறை பயிர்கள் 1,07,975 எக்டர் பரப்பளவிலும், தோட்டக்கலை பயிர்கள் 26,000 எக்டர் பரப்பளவிலும் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்கில் விவசாயிகள் அதிகளவில் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துகின்றனர். விவசாயிகள் தங்களது சாகுபடி செலவில் 40 சதவிகிதம் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு செலவிடுகின்றனர். இரசாயன உரங்களை அளவுக்கு அதிகமாகவும், சமநிலையற்ற முறையிலும் பயன்படுத்துவதால் மண்ணின் வளம் குறைதல், மண் நுண்ணுயிர்களின் செயல்பாடு பாதித்தல், நீர்நிலைகள் மாசுபடுதல் போன்ற இயற்கை வளங்கள் பாதிக்கப்படுகின்றன.
எனவே, இரசாயன உரங்களின் பயன்பாட்டை படிப்படியாக குறைத்து, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மையைப் பின்பற்ற வேண்டும். அதனடிப்படையில், இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டினை குறைப்பதற்கான விழிப்புணர்வு கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற்று வருகிறது. இரசாயன உரப் பயன்பாட்டினை குறைக்க இயற்கை உரங்களான பசுந்தாள் உரம், மண் புழு உரம், மக்கிய தொழு உரம், பஞ்சகாவ்யா, ஜீவாமிர்தம், மீன் அமிலம் மற்றும் பூச்சி மருந்துக்கு மாற்றாக இயற்கை பூச்சி விரட்டிகளான வேப்ப எண்ணெய், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.
விவசாயிகளுக்கு இயற்கை இடுபொருட்கள் உற்பத்தி மையம் அமைத்திட மானியம் மற்றும் இயற்கை விவசாயக் குழுவிற்கு சாகுபடி மானியம் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகின்றது. மேலும், விவசாயிகள் மண் பரிசோதனை செய்து நவீன உர மேலாண்மையை பின்பற்றி இடுபொருட்கள் செலவினை குறைத்து தங்களின் வருமானத்தினையும் அதிகரிக்கலாம். இனி வரும் காலங்களில் இயற்கை விவசாயத்தை பின்பற்றி நஞ்சில்லாத உணவை உற்பத்தி செய்ய விவசாயிகள் அனைவரும் முன்வர வேண்டும்.
அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களை வழிவகுத்து செயல்படுத்தி வருகிறது. எனவே, விவசாயிகள் அனைவரும் அரசின் நலத்திட்டங்களை பின்பற்றி தங்களின் வாழ்வாதரங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில், வேளாண்மை இணை இயக்குநர் திரு.மோகன்தாஸ் சௌமியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) திருமதி அ.அம்சவேணி, அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
0
Leave a Reply