விருதுநகர் கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வணிகம் தொடர்பான 5 புதிய நூல்களை காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் வெளியிட்டார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (05.05.2025) அன்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில், விருதுநகர் கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வணிகம் தொடர்பான 5 புதிய நூல்களை மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வெளியிட்டார்.
பின்னர், நூல்கள் எழுதிய பேராசிரியர்களுக்கு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.மாவட்ட நிர்வாகத்தின் சிறந்த முன்னெடுப்பாக தான் கரிசல் இலக்கியத்திற்கென்று ஒரு மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு விழாக்கள் நடத்தினாலும், நமது மண் சார்ந்த விழாக்கள் நடத்துவதற்காக எப்படி தமிழ் இலக்கிய வரலாற்றில் கரிசல் இலக்கியத்திற்கென்று பங்களிப்பு, இடம் இருக்கின்றதோ அதை வெளிக்கொணரக் கூடிய வகையில் அது குறித்த ஒரு அருமையான அருங்காட்சியகம் உருவாக்கி அந்த களத்தில் பணியாற்றக்கூடிய தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எழுத்தாளர்களை ஒரு சேர குவித்து அங்கு கரிசல் இலக்கிய திருவிழாவும் நடத்தப்பட்டு வருகிறது.தொடர்ச்சியான அலுவல் சார்ந்து இருக்கக்கூடிய கடமைகளில் இது ஒரு முக்கியமான கடமையாக கருதி, இந்த நூல்களை பேராசிரியர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.
கீழடி அருங்காட்சியத்திற்கு இணையாக நம்முடைய விருதுநகர் அருங்காட்சியம் உருவாக்குகிறோம். நம்முடைய மரபுகளை பாதுகாப்பது என்பது மிகவும் முக்கியம். குடவரைக் கோவில்கள் என்றால் அது பல்லவர் காலத்;தில் இருக்கக்கூடியது என்று தான் கூறுவோம். சோழ நாட்டில் இல்லாத பெருமை நம்முடைய நாட்டில் இருக்கிறது என்றால் அது வட்டனத்தி கல்வெட்டு.இந்த கல்வெட்டு நம்முடைய பாண்டிய நாட்டுக்கென்று உருவாக்கப்பட்டது. அந்த காலத்தில் மாந்தர்கள் எப்படி வாழ்ந்தார்கள். எப்படி சிறப்பாக அமைந்திருக்கிறது என்பதை வாழ்வியல் நெறிமுறைகளையும் விளக்குவதாக இந்த கல்வெட்டுகள் அமைந்திருக்கிறது.
எக்காலத்திற்கும் ஏற்ற மொழியாக இருப்பது நமது தமிழ் மொழிதான். தமிழ் மொழியின் சிறப்புகளை அறிஞர்கள் புத்தக வடிவில் தந்து இருக்கிறார்கள்.புதிய நூல்களை இயற்றக்கூடிய அதே நேரத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு தரப்பினருடைய கூட்டு உழைப்பில் உருவாக்கப்பட்ட நூல்கள் எல்லாம் குளத்தில் இட்ட விளக்காக இருக்கின்றதே தவிர, அதை குன்றிலிட்ட விளக்கமாக மாற வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் இப்படி ஒரு முன்னெடுப்பை செய்ய வேண்டும் என்று மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் இடத்தில் ஆலோசனைகள் கேட்டபோது, அமைச்சர் அவர்கள் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் என்ற ஒரு தனி ஆய்வு அமைப்பில் புரவலராக இருந்து தொடர்ச்சியாக நமது பகுதிகளில் இதுவரை வெளிவராத கல்வெட்டுக்கள், வரலாற்று ஆய்வுகள் எல்லாம் அவருடைய முயற்சியால் பல ஆய்வு கட்டுரைகள், பல நூல்கள் வெளிவந்திருக்கின்றன. இன்று வெளியிட்டுள்ள இந்த 5 புதிய நூல்களும் நிச்சயமாக அதனுடைய தொடர்ச்சியாக இருக்கும்.நமது மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 15 நூல்களும் தற்போது இந்த புதிய 5 நூல்களும் என மொத்தம் 20 நூல்கள் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, வே.வ.வன்னியபெருமாள் மகளிர் கல்லூரி முன்னாள் வரலாற்றுத் துறைத்தலைவர் முனைவர் திருமதி சி.மனோராஞ்சிதமணி அவர்கள் எழுதிய “தென்தமிழ் நாட்டின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள்- ஒரு கண்ணோட்டம்“ என்ற நூலும்,
அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரி முதுநிலை வராலாற்றுத்துறை பேராசிரியை (சுயநிதி) முனைவர் திருமதி எல்.மகேஸ்வரி அவர்கள் எழுதிய விருதுநகர் மாவட்டக் கல்வெட்டுகள் (கிபி 6-ஆம் நூற்றாண்டு முதல் 16-ஆம் நூற்றாண்டு வரை)’-ஓர் ஆய்வு” என்ற நூலும்,இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர்(சுயநிதி) முனைவர் திரு.மு.பிரசன்னா அவர்கள் எழுதிய ‘திருக்குறள் என்றைக்குமான இலக்கியம்’ என்ற நூலும்,சிவகாசி அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரி (தன்னாட்சி), தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் ந.அருள்மொழி அவர்கள் எழுதிய "சங்க இலக்கியமும் இளையோரும் மற்றும் மக்கள் இலக்கியம் -சிலப்பதிகாரம்" என்ற நூலும்,சிவகாசி தி ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ஜெ.ஜீவப்பிரியா அவர்கள் எழுதிய “100 ஆண்டுகளின் வணிக ஆளுமைகள்- விருதுநகர் மாவட்டம்" என்ற நூலும் என விருதுநகர் கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வணிகம் தொடர்பான 5 புதிய நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த 5 நூல்களை உருவாக்கிய அனைத்து பேராசிரியர் பெருமக்களுக்கும், இதற்கு பின்புறமாக இருந்து உழைத்த வரலாற்று ஆய்வாளர்களுக்கும், சுற்றுலாத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும், இதைவிட மிக முக்கியமாக இது போன்ற நூல்களை தொடர்ச்சியாக நமது மாவட்டத்தில் கொண்டு வருவதற்கு அதற்கு அனைத்து விதத்திலும் உறுதுணையாக இருக்கக்கூடிய நமது மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவர்களுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் தங்களின் நூல்கள் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.இந்நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் திருமதி உமாதேவி, விருதுநகர் நகர்மன்ற தலைவர் திரு.மாதவன், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply