சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டிகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் (09.09.2026) கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களிடையே சமூக நல்லிணக்கத்தினை மேம்படுத்திடவும், போதையில்லா இளைஞர் சமூகத்தினை உருவாக்கிடவும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் சார்பில் பல்வேறு முன்னெடுப்பு திட்டங்களை செயல்படுத்திவருகிறார். தமிழக இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தினை ஏற்படுத்திடவும், திறமையான விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு பயிற்சியளித்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்க செய்திடும் வகையில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள விளையாட்டு வீரர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்பதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக விளையாட்டு விடுதிகளை ஏற்படுத்தி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விளையாட்டு விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தினந்தோறும் வழங்கப்படும் செலவினத்தொகையினை ரூ.350-லிருந்து ரூ.450-ஆக உயர்த்தி வழங்கி வருகிறார். மாணவர்கள் விளையாடுவதன் மூலமாகவே உடல் ஆரோக்கியத்தினை பாதுகாக்க முடியும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே மன அழுத்தமின்றி ஒரே கவனத்துடன் கல்வி பயிலவோ, செயலாற்றிடவோ முடியும். சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்கி உற்சாகப்படுத்தி வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே விளையாட்டு ஆர்வத்தினை ஏற்படுத்தும் விதமாக மாவட்டந்தோறும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.
அதனடிப்படையில், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று 09.09.2026 முதல் 30.09.2026 வரை மாவட்ட விளையாட்டு அரங்கம் உட்பட 10 இடங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்கும் வகையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.மேலும், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட 38 வகையான போட்டிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இவ்வாண்டு வில்வித்தை, வுஷீ (Wushu), துப்பாக்கிச் சுடுதல், யோகா, மல்லர்கம்பம், ஸ்பீடு ஸ்கேட்டிங் மற்றும் நீர் விளையாட்டுகளான கயாக்யிங் (Kayaking) மற்றும் கேனோயிங் (Canoeing) போன்ற புதிய விளையாட்டுக்களையும் சேர்க்க உத்தரவிட்டுள்ளார்கள். எனவே, இவ்வாண்டு 45 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.
விளையாட்டுப் போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 3000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 2000 ரூபாயும், மூன்றாம் பரிசாக 1000 ரூபாயுடன் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 1,00,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 75,000 ரூபாயும், மூன்றாம் பரிசாக 50,000 ரூபாயும் வழங்கப்படும். குழுக்களுக்கு இடையே நடைபெறும் போட்டிகளுக்கு முதல் பரிசாக 75,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 50,000 ரூபாயும், மூன்றாம் பரிசாக 25,000 ரூபாயும் வழங்கப்படும். முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ள வீரர்கள் உங்களது முழு திறனையும் வெளிபடுத்தி வெற்றி பெற்று நமது மாவட்டத்திற்கும் உங்களது பெற்றோருக்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் தெரிவித்தார்.நிகழ்வில், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.குமரமணிமாறன், பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply