மல்லாங்கிணறு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்டுள்ள 40 குடியிருப்புகளுக்கான சாவிகளை, அமைச்சர் அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கி, புதிய வீடுகளை பார்வையிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் (06.10.2025) பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில், இலங்கை தமிழர்களுக்கு அருப்புக்கோட்டை வட்டம் குல்லூர்சந்தை, காரியாபட்டி வட்டம் மல்லாங்கிணறு மற்றும் வெம்பக்கோட்டை வட்டம் கண்டியாபுரம் ஆகிய இடங்களில் மொத்தம் ரூ.27.41 கோடி மதிப்பிட்டில் கட்டப்பட்டுள்ள 408 குடியிருப்புகளை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.அதனைத்தொடர்ந்து, மல்லாங்கிணறு இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் ரூ.2.68 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 40 குடியிருப்புகளுக்கான சாவிகளை, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன் அவர்கள் தலைமையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கி, புதிய வீடுகளை பார்வையிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்திடவும், பாதுகாப்பான மேம்படுத்தப்பட்ட வாழ்வியல் சூழ்நிலைகளை அமைத்துத் தருவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தமிழ்நாடு சட்டப் பேரவைவிதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், இலங்கைத் தமிழர்களது முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகள் கட்டித் தரப்படும். முகாம்களின் அடிப்படைவசதிகள் மேம்படுத்தப்படும். ஆண்டுதோறும் இலங்கைத் தமிழர் வாழ்க்கைத் தர மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.அதன்படி, பொறியியல்/வேளாண்/முதுநிலை பட்டப்படிப்பு மாணவ, மாணவியருக்கு கல்வி மற்றும் விடுதிக் கட்டணம் வழங்குதல், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி, சுய உதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி மற்றும் சமுதாய முதலீட்டு நிதி, மாதாந்திர பணக்கொடை உயர்வு, இலங்கைத் தமிழர்களுக்கு விலையில்லாமல் அரிசி, விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்புகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் பல்வேறு கட்டங்களாக புதிய வீடுகள் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் ஏழு இலங்கைத் தமிழர் முகாம்கள் உள்ளது.முதல் கட்டமாக அருப்புக்கோட்டை வட்டம் குல்லூர்சந்தை முகாமில் 70 வீடுகளும், வெம்பக்கோட்டை வட்டம் கண்டியாபுரம் முகாமில் 232 வீடுகளும், சிவகாசி வட்டம் அனுப்பன்குளம் முகாமில் 32 வீடுகளும், ஆணைக்குட்டம் முகாமில் 117 வீடுகளும் மற்றும் செவலூர் முகாமில் 70 வீடுகளும் ஆக மொத்தம் 451 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டது.தற்போது இரண்டாம் கட்டமாக அருப்புக்கோட்டை வட்டம் குல்லூர்சந்தை முகாமில் 244 வீடுகளும், வெம்பக்கோட்டை வட்டம் கண்டியாபுரம் முகாமில் 124 வீடுகளும், காரியாபட்டி வட்டம் மல்லாங்கிணறு முகாமில் 40 வீடுகளும் ஆக மொத்தம் 408 வீடுகள் 27.41 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மல்லாங்கிணறு இலங்கை மறுவாழ்வு தமிழர்கள் முகாமில் ரூ.2.68 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 40 குடியிருப்புகளுக்கான சாவிகளை,நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கி, புதிய வீடுகளை பார்வையிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் இலங்கை தமிழர் முகாம்களில் அகதிகள் என்ற பெயரில் வாழக்கூடிய நம்முடைய சொந்தங்கள் இனி அவர்கள் இந்தப் பெயர்களால் அழைக்கப்பட மாட்டார்கள் அவர்கள் முகாம் வாழ் இலங்கை தமிழர்கள் என்று அழைக்கப்படுவார் என்று அறிவித்தார்கள்.அந்த அறிவிப்பு பெயர் அளவிற்கு இல்லாமல் இலங்கை தமிழர்கள் என்பவர்கள் நம்முடைய தமிழ் சொந்தங்கள் என்ற வகையில் அவர்களுக்கான நலவாழ்வை பெற்றுத் தருவதே இந்த அரசினுடைய பெருமை.மல்லாங்கிணறு முகாமில் ஏறத்தாழ 40 வீடுகள் கட்டப்பட்டு அவை இன்று பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 2 கோடியே 68 லட்சம் செலவில் 40 வீடுகள் கட்டப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழர்கள் எங்கிருந்தோ வந்தவர்கள் என்று கருதாமல் அவர்களும் தாய் தமிழ்நாட்டின் சொந்தங்கள் என்ற கருத்தின்படி, எல்லோருக்கும் செய்யக்கூடிய வசதிகளை இலங்கைத்தமிழர்களுக்கும் செய்து தர வேண்டும் என்ற உணர்வோடு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த காரியத்தை செய்து கொடுத்துள்ளார்.இலங்கத்தமிழர் வீட்டுப் பிள்ளைகள் படிக்கக்கூடிய படிப்பு அதற்கான கட்டணங்கள் பொறியியல் படிப்பாக இருந்தாலும், வேளாண்மை படிப்பாக இருந்தாலும் அந்த படிப்புக்கான கட்டணங்களை அரசு செலுத்துகிறது.வேலைவாய்ப்பு திறன் பயிற்சி வாய்ப்புகள், விலையில்லா அரிசி வழங்கக்கூடிய திட்டங்கள், விலையில்லா எரிவாயு வழங்கக்கூடிய திட்டங்கள் என்று பல்வேறு நலத்திட்டங்களை உங்களுக்காக நமது முதலமைச்சர் அவர்கள் வழங்கி இருக்கிறார்கள் என தெரிவித்தார்.
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்துவரும் இலங்கை தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசின் மூலம் அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகள் கட்டிகொடுத்தமைக்காகவும், தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் எங்களுக்கும் வழங்கி எங்களது வாழ்வாதார முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இலங்கைத் தமிழர்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.கேசவதாசன், உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) திரு.மணிகண்டன், உதவி இயக்குநர்(தணிக்கை) திரு.முருகன், மல்லங்கிணறு பேரூராட்சி தலைவர் திரு.துளசிதாஸ், காரியாபட்டி பேரூராட்சி தலைவர் திரு.செந்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.ஜெயராம், காரியாபட்டி வட்டாட்சியர் திரு.மாரீஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply