சிவகாசி வட்டம் சாட்சியாபுரம் இரயில்வே மேம்பாலம் கட்டுவதற்காக பணிகள் தொடங்கப்படவுள்ளதால் 05.08.2024 முதல் வாகனங்களை மாற்றுப்பாதையில் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விருதநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் சாட்சியாபுரம் அருகில் இரயில்வே கடவு எண் 427க்கு மாற்றாக இரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டு, 26.07.2024 அன்று தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்களால் மேம்பாலப்பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இப்பணியானது விரைந்து தொடங்கப்படவுள்ளதால் 05.08.2024 முதல் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மாற்றுப்பாதைக்கான விபரங்கள் பின் வருமாறு:
1. ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சிவகாசி செல்லும் மற்றும் சிவகாசியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வரும் கனரக வாகனங்கள், கன்டைனர்கள் மற்றும் லாரிகள் திருத்தங்கல் செங்கமலநாச்சியார்புரம் சாலை வழியாக சென்று பின், சுக்கிரவார்ப்பட்டி சாலை வழியாக வடமலையான் செக் போஸ்ட் அருகில் விருதுநகர் சாலையில் இணைய வேண்டும்.
2. ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சிவகாசி வரும் பேருந்துகள், இலகு ரக வாகனங்கள், திருத்தங்கல் செங்கமலநாச்சியார்புரம் சாலை வழியாகவும் மற்றும் சிவகாசி எரிச்சநத்தம் சாலை YRTV பள்ளி சாலை வழியாகவும் சிவகாசி நகருக்குள் செல்ல வேண்டும்.
3. சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் பேருந்துகள், இலகு ரக வாகனங்கள், சிவகாசி ஆலங்குளம் சாலை வழியாக ஆனையூர் பஞ்சயத்து சாலையில் இணைந்து ரிசர்வ் லைன் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் செல்ல வேண்டும் என நெடுஞ்சாலை திட்ட கோட்டப்பொறியாளர்(திருநெல்வேலி) அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply