விருதுநகர் மாவட்டத்தில் சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026 முன்னேற்பாடுகள்.
விருதுநகர் மாவட்டத்தில் சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026 முன்னேற்பாடுகள்: தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026-ஐ முன்னிட்டு, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S. அவர்கள் தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் பொதுப் பார்வையாளர்கள், செலவினப் பார்வையாளர்கள் மற்றும் ஒருங்கிணைந்த காவல் துறைப் பார்வையாளர் ஆகியோர் முன்னிலையில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் அலுவலர்களுடன் விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
பங்கேற்ற தேர்தல் பார்வையாளர்கள்:
இக்கூட்டத்தில் பின்வரும் பார்வையாளர்கள் கலந்துகொண்டு தொகுதி வாரியான கண்காணிப்புப் பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினர்:
தேர்தல் பொதுப் பார்வையாளர்கள்:
* திரு. உதயன் மிஷ்ரா, I A S. (இராஜபாளையம் மற்றும் திருவில்லிபுத்தூர் தொகுதிகள்).
* திரு. அனுப்குமார் யாதவ், I A S,(விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை தொகுதிகள்).
* திரு. சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா, I A S . (திருச்சுழி தொகுதி).
தேர்தல் செலவினப் பார்வையாளர்கள்:
* திரு. சுக்செயின் சிங், இ.வ.ப. (இராஜபாளையம் மற்றும் திருவில்லிபுத்தூர் தொகுதிகள்).
* திரு. அனில்குமார், இ.வ.ப. (சாத்தூர் மற்றும் சிவகாசி தொகுதிகள்).
* திரு. நாயன்ஜோதி நாத், இ.வ.ப. (விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை தொகுதிகள்).
* திரு. வாக்மரே ஜெய், இ.வ.ப. (திருச்சுழி தொகுதி).
ஒருங்கிணைந்த காவல் துறைப் பார்வையாளர்:
மாவட்டத்தின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒருங்கிணைந்த காவல் பார்வையாளராக திரு. அகிலேஷ் குமார் சௌராசியா, இ.கா.ப. அவர்கள் ஆகியோர் பங்கேற்றார்கள்.
ஆலோசனைக் கூட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
இக்கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளைப் பின்பற்றுதல், தேர்தல் பிரச்சாரம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டன. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பின்வரும் அம்சங்கள் விவாதிக்கப்பட்டன:
வாக்குப்பதிவு முன்னேற்பாடுகள்: வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) தயார் நிலை மற்றும் முதல்நிலை சரிபார்ப்புப் பணிகள் (FLC) குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
செலவினக் கண்காணிப்பு: வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள், விளம்பரங்களுக்கான முன்-அனுமதி (MCMC) மற்றும் பறக்கும் படைகளின் செயல்பாடுகள் குறித்து செலவினப் பார்வையாளர்கள் விளக்கினர்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்: பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சட்ட ஒழுங்கு பராமரிப்பு குறித்து காவல் துறைப் பார்வையாளர் ஆலோசனைகளை வழங்கினார்.
சிறப்பு வசதிகள்: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு நடைமுறைகள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மாவட்டத் தேர்தல் அலுவலரின் வேண்டுகோள்:
நேர்மையான, அமைதியான மற்றும் சுதந்திரமான முறையில் தேர்தல் நடைபெற அனைத்து அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். மேலும், தேர்தல் தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அந்தந்த தொகுதிக்குரிய தேர்தல் பார்வையாளர்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் (ROs), உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் (AROs) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
0
Leave a Reply