தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005 தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (09.01.2026) அனைத்துத்துறை பொதுத் தகவல் அலுவலர்களுக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005 தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I AS., அவர்கள் முன்னிலையில், மாநில தகவல் ஆணையர் திரு.வி.பி.ஆர்.இளம்பரிதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.அரசு அலுவலர்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வை அதிகரித்தல், குடிமக்கள் உரிமைகளைப் புரியவைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு நடத்தப்படுகின்றது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறைகளைச் சார்ந்த பொதுத்தகவல் அலுவலர்களுக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் விதிகள் குறித்து விவரிக்கப்பட்டது.மனுதாரர்கள் 6(1)-ன்படி கோரும் தகவல்கள் தங்கள் அலுவலகத்தை சார்ந்தது அல்ல என்றால் 5 நாட்களில் 6(3)-ன்படி உரிய பொதுத் தகவல் அலுவலருக்கு அனுப்ப வேண்டும். மனுதாரர்களுக்கும் இது குறித்து தெரிவிக்கப்பட வேண்டும். அரசு துறைகள் தங்கள் அலுவலகம் சார்ந்த தகவல் என்றால் 30 நாட்களுக்குள் தகவல்கள் வழங்க வேண்டும். தகவல்கள் வழங்கும் அலுவலர் அவரது பெயர் மற்றும் கையொப்பம், பொது தகவல் அலுவலரின் சீல் கட்டாயம் இட வேண்டும். மனுதாரர்களுக்கு மேல் முறையீட்டு அலுவலர் பெயர் மற்றும் முகவரி குறிப்பிட்டு தெரிவிக்கப்பட வேண்டும். பிரிவு 7(3)-ன்படி தகவல்கள் வழங்கும் நிலையில் பக்கத்திற்கு ரூ.2/-வீதம் கணக்கிட்டு பணம் செலுத்தும் வழி வகைகள் தெரிவிக்க வேண்டும்.
தகவல் பெறும் உரிமைச்சட்ட பிரிவு 5(3)-ன்படி பொது தகவல் அலுவலரிடம் தனக்கு வேண்டிய தகவல் தொடர்பாக விவரங்களை மனுதாரர் கோரி வரும்போது அவருக்கு தேவையான நியாயமான உதவிகளை பொது தகவல் அலுவலர் வழங்க வேண்டும். தவறான தகவல்கள் மற்றும் திசை திருப்பும் தகவல்கள் வழங்கக்கூடாது. கட்டாயம் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களை பிரத்யேகமாக உள்ள தனிப்பதிவேடுகளில் பதிவு செய்ய வேண்டும்.பொது தகவல் அலுவலர் பெயர் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர் பெயர் குறிப்பிடப்பட்ட முகவரி பலகை தங்கள் அலுவலகத்தில் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். ஆணையத்திலிருந்து விசாரணை அறிவிப்பு (சம்மன்) கிடைக்கப் பெற்றால் கட்டாயம் அரசு அலுவலர்கள் ஆணையம் முன்பு விசாரணைக்கு வருகை தர வேண்டும் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, நிலுவையிலுள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, பள்ளிக்கல்வித்துறை, வட்ட வழங்கல் துறை ஆகிய துறைகளின் இரண்டாம் மேல்முறையீட்டு மனுக்கள் மீது அலுவலர்களிடம் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின்போது 30 மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பாக மனுதாரர்கள் மற்றும் தொடர்புடைய பொது தகவல் அலுவலர்கள் ஆகியோர்களிடம் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் பொது தகவல் அலுவலர்களுக்கு மாநில தகவல் ஆணையர் அவர்களால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கருப்பையா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி பிர்தௌஸ் பாத்திமா, அனைத்துத் துறை பொதுத் தகவல் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply