கூட்டுறவுச் சங்கத் தேர்தல்,குடும்ப அட்டை மற்றும் ஆதார் எண் விவரங்களை வழங்காத உறுப்பினர்கள் வாக்களிக்கவோ, போட்டியிடவோ இயலாது மாவட்ட ஆட்சியர் தகவல்.
விருதுநகர் துணைப்பதிவாளர் (பால்வளம்) அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்கள், தங்கள் விவரங்களைப் புதுப்பிக்க வேண்டியது அவசியமாகும். 1988-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் விதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களின்படி, சங்க உறுப்பினர்கள் நுழைவுப் புத்தகத்தில் உறுப்பினரின் பெயரின் கீழ் குடும்ப அட்டை எண் மற்றும் ஆதார் எண் பதியப்பட வேண்டும்.
இது தொடர்பாகச் சங்கச் செயலாளர் மற்றும் தலைவர் மூலம் ஏற்கனவே அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும், இதுவரை குடும்ப அட்டை மற்றும் ஆதார் எண் நகல்களை வழங்காத உறுப்பினர்களுக்கு, இயற்கை நியதி கோட்பாடுகளின்படி மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
எனவே, கூட்டுறவுத் தேர்தல் விதி 52(7) (ந) (i)-ன் படி தயாரிக்கப்படும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம்பெறுவதை உறுதிசெய்ய, உறுப்பினர்கள் தங்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதார் எண்ணின் ஒளியச்சு (Xerox) நகல்களைச் சங்கத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விவரங்களைப் பதிவுத் தபாலிலோ அல்லது சங்க வேலை நேரங்களில் நேரிலோ வரும் 30.04.2026-க்குள் கிடைக்குமாறு வழங்க வேண்டும்.
உறுப்பினர்கள் இந்த விவரங்களை வழங்கத் தவறும்பட்சத்தில், விதி 52(7) (ந)-ன் படி சங்க நிர்வாகக்குழு தேர்தலில் வாக்களிக்கவோ அல்லது வேட்பாளராகப் போட்டியிடவோ தகுதியை இழக்க நேரிடும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply