அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு .
விருதுநகர் மாவட்டம், பாலவநத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் (08.01.2026) பொங்கல் திருநாள்-2026 ஐ முன்னிட்டு, கூட்டுறவுத் துறையின் மூலம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்புடன்(ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு, இலவச வேட்டி, சேலை) ரூ.3000/- ரொக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கி தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கு இணங்க 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு மக்கள் சிறப்பாக கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு, இலவச வேட்டி, சேலை மற்றும் ரூ.3000/- ரொக்கப்பணம் சேர்த்து இன்று முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் தமிழ்நாடு முழுவதும் அரிசி பெறும் 2,22,72,019 குடும்ப அட்டைதாரர்கள், பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற உள்ளனர்.
அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில், கூட்டுறவுத்துறை மூலம் 5,64,349 குடும்ப அட்டைதாரர்களுக்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 34,924 குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் முகாம்களில் உள்ள 1,062 குடும்ப அட்டைதாரர்களுக்கும், 3,704 மகளிர் குடும்ப அட்டைகள் என மொத்தம் 6,04,039 குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இப்பணி தொடர்ந்து நடைபெற்று பொங்கல் திருநாளுக்கு முன்னரே சம்மந்தப்பட்ட நியாய விலைக்கடைகள் மூலம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.
இந்த ஆண்டு பொங்கல் மகிழ்ச்சியான பொங்கல் நாளாக அமைய வேண்டும் என்பதற்காக உங்களுக்கு ரூ.3,000/-ரொக்கமாகவும், 1 கிலோ பச்சரிசி, 1கிலோ சக்கரை, 1 முழுக்கரும்பு உள்ளிட்டவைகளை நான்கு நாட்களுக்குள் வழங்குமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். ஒரு குடும்பத்தில் குடும்பத்தலைவரை போல, தமிழ்நாட்டின் தலைவராக இருக்கக்கூடிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிதிநிலையை சிறப்பாக கையாண்டு, திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.3000/- ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்க ஆணையிட்டுள்ளார்கள்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்த விடுபட்ட தகுதியான பெண்களுக்கு உரிமைத்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அதிலும் விடுபட்ட தகுதியானவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசாங்கத்தின் அனைத்து வகையான திட்டங்களும் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்பட்டு வருகிறார். அத்தகைய முதலமைச்சர் அவர்களுக்கு நாம் அனைவரும் உறுதுணையாக நிற்க வேண்டும். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, வட்டாட்சியர், அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply