தென்மேற்கு பருவ மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ,அவர்கள் தலைமையிலான அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (11.05.2026) அன்று தென்மேற்கு பருவ மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I.A.S.., அவர்கள் தலைமையில், அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது:
மழையினால் பாதிப்புக்குள்ளாகும் இடங்களை கண்டறிந்து பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு ஏதுவாக, நிவாரண மையங்களை தயார் நிலையில் வைத்து அதன் பொறுப்பு அலுவலர்களுக்கு சம்மந்தப்பட்ட துறையினருடன் சேர்ந்து ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும்.இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் பேரிடர் காலங்களில் பொதுமக்களை பாதுகாக்க சட்டம் ஒழுங்கு கடைப்பிடிக்க வேண்டும். மழைக்காலங்களில் சாலையோரம் மரங்கள் விழும் பொழுது போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும்.மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வட்ட மற்றும் வட்டார அளவில் மாதிரி வெள்ள மீட்பு ஒத்திகைகள் (Mock Drills) நடத்தி நாளேடுகளில் விளம்பரம் செய்ய வேண்டும்.
அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களும் MI Tank ஆய்வு செய்திருக்க வேண்டும். வெள்ள நீர் சீரான முறையில் செல்வதை தடுக்கும் முட்செடிகள் மற்றும் புதர்களை அகற்றுதல் சிறுபாசனக் கண்மாய்கள், ஊரணி, குளங்கள் திறந்தவெளிக் கிணறுகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், இவைகளிலுள்ள விரிசல்கள், உடைப்புகளை சரி செய்தல், குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் சூழ்வதை தவிர்த்தல், போதிய அளவு மணல் மூட்டைகள், சாக்குப் பைகளை உடைப்புகளை சரிசெய்யும் பொருட்டு இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பொதுப்பணித்துறையின் கட்டுபாட்டில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஊரணிகளை ஆய்வு செய்ய வேண்டும். வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பொருட்டு ஜேசிபி மற்றும் கனரக வாகனங்களின் ஓட்டுநர்கள் மற்றும் உறுதியாளர்கள் கைபேசி எண், மாவட்ட நிலை அதிகாரிகளின் தொடர்பு எண்களை பெற்று ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
மழை வெள்ள காலங்களில் சாலைகளில் மரங்கள் சாய்ந்து விழுதல் மற்றும் மழை வெள்ளத்தினால் சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்படுதல் போன்ற இடங்களில் உடனடியாக சீரமைப்புப் பணிகள் செய்ய தேவையான நவீன உபகரணங்கள், வாகனங்கள் மற்றும் மணல் மூடைகளை தயார் நிலையில் போதுமான அளவு வேண்டும்.
அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய், சாக்குப் பைகள் மற்றும் இதர உணவுப் பொருட்களை போதுமான அளவு இருப்பு வைத்துக் கொள்ளவும்,மற்றும் மனிதவளம் உள்ளதை உறுதி செய்யவும், நியாய விலைக் கடைகளில் போதுமான அளவு அத்தியாவசியப் பொருட்கள் இருப்பு வைக்கவும், மண்ணெண்ணெய், எரிவாயு மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகளுக்கு தேவையான அளவு இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.
மருத்துவமனையில் நோய்த்தடுப்பு மருந்துகள், உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் தொற்று நோய் தடுப்பு மருந்துகள் தேவையான அளவு இருப்பு உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.பகுதி வாரியாக மருத்துவக் குழுக்கள் அமைத்து அவற்றை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆம்புலன்ஸ், ஜெனரேட்டர் போன்ற வசதிகளை மருத்துவமனையில் முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
உயர்அழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் கம்பி, மின்மாற்றிகளை முறையாக பராமரிப்பு செய்ய வேண்டும். தாழ்வாக உள்ள மின்கம்பிகளை உடனடியாக சரி செய்ய வேண்டும்பேரிடர் காலங்களில் மழை வெள்ளதால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வட்டார போக்குவரத்து துறையில் இருந்து வாகனங்களை ஏற்பாடு செய்தும், அரசு துறைகளில் உள்ள வாகனங்களை ஆய்வு செய்து நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, சார் ஆட்சியர் திரு.முகமது இஃர்பான், திட்ட அலுவலர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply