மாவட்டத்தில் குழந்தைகள் நலன் சார்ந்த பணிகள் குறித்து தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் திருமதி ஆர்.ஜெயசுதா அவர்கள் தலைமையில் கூராய்வுக் கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (14.10.2025) அன்று விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் சார்ந்த பணிகள் குறித்து தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் திருமதி ஆர்.ஜெயசுதா அவர்கள் தலைமையில், ஆணைய கூராய்வுக் கூட்டம் நடைபெற்றது.மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் மனசு ஆலோசனைப்பெட்டியும், தனியார் பள்ளிகளில் புகார் பெட்டியும் வைக்கப்பட்டுள்ளது. இப்பெட்டிகளில் மாணவர்கள் போடப்படும் புகார் கடிதங்களை பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள மூத்த ஆசிரியர் உள்ளிட்ட உறுப்பினர்களை கொண்டு குழுக்கள் அமைத்து அப்புகார் மனுவிற்கு தீர்வு காண வேண்டும்.
இப்புகார் குறித்த பதிவேடுகளை பள்ளிகளிலும், மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் பராமரிக்கப்பட வேண்டும். தனியார் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ-மாணவியர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆற்றுப்படுத்துநர்கள கட்டாயம் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகளை கள ஆய்வு மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும், பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியும் தருணங்களில், அக்குழந்தைகளுக்கு முறையாக ஆலோசனை வழங்கி அக்குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும். அக்குழந்தைகள் குறித்து முழுமையான சமூக விசாரணை அறிக்கை தயார் செய்து ஆவணப்படுத்த வேண்டுமென்றும் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாடு பெண்கள் விடுதிகள் மற்றும் குழந்தைகள் இல்லங்கள் (முறைப்படுத்துதல்) சட்டம் 2014-ன் கீழ் மாவட்டத்தில் பள்ளிகளின் கீழ் செயல்படும் பள்ளி விடுதிகள் அனைத்து பதிவு மற்றும் உரிமைச்சான்று பெற்றிருக்க வேண்டும். அவ்விடுதியினை முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளர், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கண்டறியப்படும் பட்சத்தில், அக்குழந்தைகளை மீட்டு குழந்தைகள் நலக்குழு முன் ஒப்படைத்து குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு பின்தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அக்குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை குழந்தைகள் நலக்குழு முன் ஆஜராகி வேண்டும் என தெரிவித்தார்.
பின்னர், விருதுநகரில் செயல்பட்டு வரும் அன்னை சத்யா அம்மையார் அரசு குழந்தைகள் இல்லத்தினை ஆய்வு மேற்கொண்டார். மேலும், சிவகாசியில் செயல்படும் பட்டாசு ஆலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனரா என்றும் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் திருமதி ஆர்.ஜெயசுதா அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் . இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி இல.மீனாட்சி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கருப்பையா, முதன்மை கல்வி அலுவலர் திரு.இரா.மதன்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply