கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், பயிர்களை வெப்பத்தின் பாதிப்பிலிருந்து பாதுகாக்க விவசாயிகள் உரிய வழிமுறைகளை பின்பற்றுமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தல்.
விருதுநகர் மாவட்டத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், பயிர்களை வெப்பத்தின் பாதிப்பிலிருந்து பாதுகாப்பது குறித்து விவசாயிகளுக்கு உழவர் நலத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், மக்காச்சோளம் பயறு வகைள், எள், நிலக்கடலை, காய்கறிகள், மலர்கள் மற்றும் பழப்பயிர்களில் கோடை வெப்பம் காரணமாக மலர் உதிர்தல், காய் பிடிப்பு குறைதல் மற்றும் கருகல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனைத் தவிர்க்க விவசாயிகள் கீழ்க்கண்ட மேலாண்மை முறைகளைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நீர் மேலாண்மை:
பயிர்களுக்குச் சொட்டு நீர்ப்பாசனம் அல்லது தெளிப்பு நீர்ப்பாசன முறையைப் பயன்படுத்த வேண்டும். நீர் ஆவியாவதைத் தவிர்க்க அதிகாலை அல்லது மாலை வேளைகளில் மட்டுமே நீர் பாசனம் செய்தல் வேண்டும்.
பண்ணைப் பணிகள்:
அதிக வெப்பம் நிலவும் நேரங்களான காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை பண்ணை வேலைகளையும், புதிய நாற்று நடும் பணிகள் மேற்கொள்வதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும்.
கோடை உழவு:
கோடை உழவு மேற்கொள்வதன் மூலம் நிலத்தில் உள்ள பூச்சியின முட்டைகளை அழிக்கவும், மழைநீரைச் சேமித்து, மண்ணின் ஈரப்பதம் பாதுகாக்கப்படும்.
நிழல் வலை மற்றும் மூடாக்கு:
நாற்றங்கால் மற்றும் காய்கறிப் பயிர்களைப் பாதுகாக்க நிழல் வலைக் கூடாரங்களை அமைக்கலாம். செடிகளின் அடிப்பகுதிகளில் காய்ந்த இலைகள், தென்னை நார்க்கழிவு அல்லது பாலித்தீன் தாள்களைக் கொண்டு மூடாக்கு அமைப்பதன் மூலம் மண் ஈரப்பதம் காக்கப்படும்.
இலைவழித் தெளிப்பு:
வெப்ப அழுத்தத்தைக் குறைக்க 1 சதவீத பொட்டாசியம் குளோரைடு (KCL) கரைசலை இலைகளின் மேல் தெளிப்பதன் மூலம் நீர் ஆவியாதலைக் குறைத்து பயிர்களை பாதுகாக்கலாம்.
இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் கோடை வெயிலினால் ஏற்படும் பயிர் சேதத்தைத் தவிர்த்து, நிலையான மகசூலைப் பெற முடியும் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply