மாடித்தோட்டத்தில் வெள்ளரிக்காய் பயிரிடும் முறை.
நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம்.இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும்.எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் வெள்ளரிக்காய் பயிரிடும் முறை.
தேவையான பொருட்கள் - GrowBags அல்லதுThotti, அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு, மண்புழு உரம், செம்மண், வேப்ப எண்ணெய், பஞ்சகாவ்யா.விதைகள்,நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பான்,பந்தல் போடுவதற்கான உபகரணங்கள்.
வெள்ளரி விதைகளை விதைப்பதற்கு தொட்டியில் அல்லது பைகளில் தேங்காய் நார் கழிவு இரண்டு பங்கு, மாட்டுச்சாணம் ஒரு பங்கு, சமையலறை கழிவு ஒரு பங்கு என இயற்கை உரங்களை நிரப்ப வேண்டும். இந்த கலவை தயாரானதும்10 நாட்கள் கழித்து விதைப்பு செய்ய வேண்டும்.
இது படரும் கொடி வகை என்பதால்3 அடிக்கு மேலாக இருக்கும்படி தொட்டிகளில் மண் மற்றும் உரக்கலவையை நிரப்ப வேண்டும்.நல்ல தரமான, ஆரோக்கியமான விதைகளை தேர்ந்தெடுத்து விதைக்க வேண்டும்.2 முதல்3 விதைகள் வரை ஊன்றலாம்.விதைகளை விதைத்தவுடன் பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும். தினம் ஒருமுறை காலை அல்லது மாலை வேளையில் நீர் தெளிக்க வேண்டும்.
மாடியில் பந்தல் போடுவது எளிமையான ஒன்று ஆகும். அதற்கு நான்கு சாக்கில் மணலை நிரப்பி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மூங்கில் கம்பை ஆழமாக ஊன்றி மூலைக்கு ஒன்றாக நான்கு சாக்குகளையும், நான்கு மூலைகளில் வைக்க வேண்டும். அடியில் சிறு கற்களை கொண்டு மேடை போல் அமைத்து அதன்மீது சாக்கு பைகளை வைப்பது சிறந்தது. பின்னர் இதில் கயிறு அல்லது கம்பிகளை குறுக்கு நெடுக்காக கட்ட வேண்டும். இந்த பந்தலில் கொடிகளை படர விட வேண்டும். மாடியில் கம்பிகள் இருந்தால் அவற்றை பயன்படுத்தியும் பந்தல் போடலாம்.
செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும். வீட்டு சமையலறை கழிவுகளை ஒரு குழியில் கொட்டி மக்கச்செய்து அதனை உரமாக பயன்படுத்தலாம்.பூச்சி தாக்குதலை தவிர்க்க வாரம் ஒரு முறை வேம்பு பூச்சிவிரட்டியை2 மில்லி என்ற அளவில்1 லிட்டர் நீரில் கரைத்து மாலை வேளையில் செடிகளின் மேல் தெளிக்க வேண்டும்.
நுனி கிளைகளை கவாத்து செய்வதால் அதிக பக்கக்கிளைகள் தோன்றுவதற்கு ஏதுவாக இருக்கும். வாரம் ஒருமுறை மண்ணை கிளறி விட வேண்டும்.பஞ்சகாவ்யா50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து பூக்கும் சமயத்தில் பைகளில் ஊற்ற வேண்டும். இதனால் பூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.இதில்60 நாட்களில் காய்கள் அறுவடைக்கு வரும். காய்களை இளம்பிஞ்சு பருவத்தில் அறுவடை செய்ய வேண்டும்.
0
Leave a Reply