மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு குறித்த விழிப்புணர்வு வாகனப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கட்டசின்னம்பட்டி கிராமத்தில், வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) செயல்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் செயல்முறை வாகனப் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S., அவர்கள் (21.02.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களிடையே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கைச் சோதனை (VVPAT) இயந்திரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கட்டசின்னம்பட்டி கிராமத்தில் (21.02.2026) நடைபெற்ற நடமாடும் விழிப்புணர்வு வாகனப் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விழிப்புணர்வு வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொதுமக்கள் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்தும், தாங்கள் அளித்த வாக்கு சரியான வேட்பாளருக்குப் பதிவாகியுள்ளதா என்பதை VVPAT இயந்திரத்தின் மூலம் எவ்வாறு உறுதி செய்வது என்பது குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.இந்த ஆய்வின் போது, அங்கிருந்த பொதுமக்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், தேர்தல் நடைமுறையில் எவ்வித அச்சமும் இன்றி அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை குறித்து முழு நம்பிக்கை கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தினார். கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும், குறிப்பாக முதியவர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களுக்கு இந்த விழிப்புணர்வு சென்றடைவதை உறுதி செய்யுமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் இத்தகைய நடமாடும் வாகனங்கள் மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.வாக்குப்பதிவின் முக்கியத்துவம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் புதிய வசதிகள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.இந்த ஆய்வின் போது, சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் திரு.முகமது இர்பான், I A S., வட்டாட்சியர் திரு.இலட்சம், தேர்தல் பிரிவு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
0
Leave a Reply