பள்ளிக்கல்வித்துறை சார்பில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத 603- மாணவர்களை கண்காணித்து, சிறப்பு பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்குதல்.
விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (14.05.2026) பள்ளிக்கல்வித்துறை சார்பில், 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத 603- மாணவர்களை கண்காணித்து, சிறப்பு பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்குதல் தொடர்பாக ஒன்றிய வாரியாக நியமிக்கப்பட்டுள்ள தலைமையாசிரியர்கள் மற்றும் தனி பொறுப்பு அலுவலர்களுடனான (Nodal Officers) ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டத்தில் மார்ச் - ஏப்ரல் 2026ல் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள், விருதுநகர் வருவாய் மாவட்டத்தில் 219 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 99 தேர்வு மையங்களில் 9,731 மாணவர்களும், 11,599 மாணவியர்களுமாக மொத்தம் 21,330 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இம்மாணவர்களில், 20,727 மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில், 603-தேர்ச்சி பெறாத மாணவர்களை கண்காணித்து, சிறப்பு பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்குதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது:
மாணவர்களை அவர்களின் இல்லத்தில் சந்தித்து, மறுதேர்வு எழுதுவது தொடர்பாக உரிய விழிப்புணர்வு வழங்கப்பட வேண்டும். மாணவர்களின் குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக மறுதேர்வு எழுதுவதை தவிர்க்கும் மாணவர்களை கண்டறிந்து பெற்றோருடன் தொடர்பு கொண்டு மாணவர்கள் மீண்டும் தேர்விற்கு தயாராகும் வகையில் ஊக்குவிக்க வேண்டும்.
சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டுமெனவும். மாணவர்களின் வருகை மற்றும் முன்னேற்றத்தை வாரந்தோறும் கண்காணிக்க வேண்டுமெனவும், தொடர்புடைய அலுவலர்கள் உடனடியாக மேற்படி பணிகளை மேற்கொண்டு மாணவர்கள் 100% தேர்ச்சி பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு.அரவிந்தன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply