தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், பள்ளி / கல்லூரி மாணவர்களுக்குப் கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு செம்மொழி நாளான 03.06.2025 அன்று பரிசு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது
தமிழ் வளர்ச்சித் துறையின் 2024-2025ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கை அறிவிப்பில் ”தமிழுக்குச் செம்மொழித் தகுதி பெற்றுத்தந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெருமையைப் போற்றிடும் வகையில் அவர் பிறந்தநாளான சூன் திங்கள் 3 ஆம் நாள் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் செம்மொழி நாள் விழாவாக கொண்டாடப்படும்” என அறிவிக்கப்பெற்றுள்ளது.
செம்மொழியின் சிறப்பையும் முத்தமிழறிஞரின் தமிழ்த்தொண்டின் பெருமையையும் மாணவர்களிடம் உணர்த்திடும் வகையில் ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் 11, 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தி 03.06.2025 ஆம் நாளன்று நடைபெறவுள்ள செம்மொழிநாள் விழாவில் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 11,12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் 09.05.2025 அன்றும், கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் 10.05.2025 அன்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட நூலக அலுவலகக் கூட்ட அரங்கில் நடத்தப்பெற உள்ளன.
பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளில் அனைத்து அரசு/ தனியார் /அரசு உதவி பெறும்/ பதின்ம மேல்நிலைப் பள்ளி, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மட்டும் பங்கேற்கலாம்.
கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளில் அனைத்து அரசு/ தனியார் / அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகள் /பொறியியல்/ மருத்துவக் கல்லூரிகள்/ சட்டம் / வேளாண்மை / பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம்.
ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் ஒரு பள்ளி / கல்லூரியிலிருந்து மொத்தம் 2 மாணவர்கள் மட்டும் பங்கேற்கலாம். பள்ளி மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களைத் தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியர் ஒப்பத்துடனும் , கல்லூரி மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களைத் தாங்கள் பயிலும் கல்லூரியின் முதல்வர் ஒப்பத்துடனும் விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேரிலோ, அஞ்சல் முலமாகவோ, மின்னஞ்சல் - (tamilvalar.vnr@tn.gov.in) முலமாகவோ 05.05.2025 க்குள் அனுப்பி வைக்க வேண்டும். 05.05.2025க்குள் பதிவு செய்பவர்கள் மட்டும் போட்டிக்கு அனுமதிக்கப்பெறுவர்
கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிக்கான தலைப்புகள் ” செம்மொழியின் சிறப்பு மற்றும் முத்தமிழறிஞர் கலைஞரின் தமிழ்த்தொண்டின் பெருமை” சார்ந்து இடம்பெறும். தலைப்புகள் முன்னதாகத் தெரிவிக்கப்படமாட்டா போட்டி தொடங்கப்படும் நேரத்திற்குச் சற்று முன்னர் தான் தலைப்பு தெரிவிக்கப்படும்.போட்டிகளின் முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பரிசுகளை வழங்கவுள்ளார். பள்ளி/ கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10000, இரண்டாம்பரிசு ரூ.7000-, மூன்றாம் பரிசு ரூ.5000- என்ற வீதத்தில் பரிசுத்தொகைகள் வழங்கப்பட உள்ளன.
மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர்கள் மட்டும் 17.05.2025 அன்று சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளப் பரிந்துரை செய்யப்பெறுவர். மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.15,000-மும், இரண்டாம் பரிசாக ரூ.10,000- மும் , மூன்றாம் பரிசாக ரூ.7,000- மும் வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
0
Leave a Reply