மகாத்மா காந்தி மற்றும் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி , கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் .
தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கை அறிவிப்பில், நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால்நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வறிவிப்பிற்கிணங்க, 04.12.2025 அன்று மகாத்மா காந்தி பிறந்தநாள் பேச்சுப்போட்டியும், 05.12.2025 அன்று ஜவகர்லால் நேரு பிறந்தநாள் பேச்சுப்போட்டியும் விருதுநகர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்ட அரங்கில் பள்ளி மாணவர்களுக்கு முற்பகலிலும், கல்லூரி மாணவர்களுக்குப் பிற்பகலிலும் நடத்தப்பெறவுள்ளன.
அரசு/ தனியார் / அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்கள், அரசு/ தனியார் / அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகள் /பொறியியல்/ மருத்துவக் கல்லூரிகள்/ பல்தொழில்நுட்பக் கல்லூரிகளின் மாணவர்கள் இப்பேச்சுப்போட்டிகளில் பங்கேற்கலாம். போட்டிகள் குறித்த விவரங்கள், பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாகவும், கல்லூரிகளுக்குக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும் அனுப்பப்படும் .
மகாத்மா காந்தி பேச்சுப்போட்டி தலைப்புகள்: பள்ளி மாணவர்களுக்கு 1. காந்தியடிகளின் வாழ்க்கைச் சுவடிகள் 2. வாய்மையே வெல்லும் 3. தீண்டாமையும் காந்தியடிகளும் என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்களுக்கு 1.வாழ்விக்க வந்த எம்மான் 2. அண்ணல் காந்தியடிகளின் அரசியல் வேள்வி 3. தில்லையாடி வள்ளியம்மையும் காந்தியடிகளும் ஆகிய தலைப்புகளில் மகாத்மா காந்தி பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெறவுள்ளன.
ஜவகர்லால்நேரு பிறந்தநாள் பேச்சுப்போட்டிக்கான தலைப்புகள்: பள்ளி மாணவர்களுக்கு 1.ஜவகர்லால் நேருவின் சாதனைகள் 2. அமைதிப்புறா நேரு 3. விடுதலைப் போரில் நேருவின் பங்களிப்பு என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்களுக்கு 1. நவீன இந்தியாவின் சிற்பி 2.நேரு பதித்த சுவடுகள் 3. நேருவின் வெளியுறவுக் கொள்கை ஆகிய தலைப்புகளில் ஜவகர்லால் நேரு பிறந்தநாள் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெறவுள்ளன.
மேலும், பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000- , இரண்டாம்பரிசு ரூ.3000-, மூன்றாம் பரிசு ரூ.2000- என்ற வீதத்திலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப் போட்டியில் மட்டும், தங்கள் பேச்சுத்திறனைச் சிறப்பாக வெளிப்படுத்திய அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் தனியாகத் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசு ரூ.2000- என்ற வீதத்திலும் வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply