பைரவர் தோன்றிய வரலாறு
பைரவர் தோன்றிய வரலாறு சிறப்பானதாகும். தொடக்க காலத்தில் பிரம்மனுக்கும் ஐந்து தலைகள் இருந்தது. உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் தோற்றுவிப்பவர் என்பதால், பிரம்மனுக்கு கர்வம் உண்டானது. அதோடு சிவனை விட நாம்தான் உயர்வானவர் என்று எண்ணினார். அனைவரும் தன்னை வணங்க வேண்டும். சிவனை விட தன்னை ஒரு படி மேலே நினைக்க வேண்டும் என ஆசைப்பட்டார். அதோடு மட்டுமல்லாமல் சிவன் செய்யும் ஒவ்வொரு நிகழ்விலும் தலையிட்டுக்கொண்டே வந்தார்.
இதனால் கோபமடைந்த சிவபெருமான், தனது நகத்தினைப் பெயர்த்து தரையில் போட்டார். அதில் இருந்து கால பைரவர் தோன்றினார். அவர் வேகமாகச் சென்று பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றை கொய்தார். அதன் பிறகே பிரம்மன், நான்முகனாக மாறினார். தனது அகந்தை அழிந்து, சிவபெருமானின் பக்தரானார் என்று சிவ மகாபுராணம் சொல்கிறது. சக்தி பீடங்கள் தோறும் காலபைரவர் மிகச் சிறப்பாகப் போற்றப்படுகிறார். தகுராசூரன் என்பவன், பெண்களால் மட்டுமே தனக்கு அழிவு வர வேண்டும்' என்ற வரத்தை பெற்றிருந்தான். அந்த ஆணவத்தால், மக்கள் அனைவரையும் துன்புறுத்தி வந்தான்.
இதையடுத்து பார்வதிதேவி, காளியாக வடிவம் எடுத்து அந்த தகுராசூரனை அழித்தாள். அதன் பிறகு அவளின் ஆக்ரோஷத்தில்தான் கால பைரவர் தோன்றினார் என்று சொல்பவர்களும் உண்டு. அன்னை அவருக்குப் பால் கொடுக்கும்போது, இருவரையும் சிவபெருமான் ஆட்கொண்டார். சிவபெருமானைப் போலவே, பைரவருக்கும் 64 வடிவங்கள் சிறப்பாக போற்றப்படுகின்றன. இவரை 'அஷ்ட பைரவர்' மற்றும் 'சட்டநாதர்' என சிறப்புப்படுத்தி அழைக்கிறார்கள்.
0
Leave a Reply