குல்லூர்சந்தை மற்றும் மல்லாங்கிணறு ஆகிய இடங்களில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் குல்லூர்சந்தை, காரியாபட்டி வட்டம் மல்லாங்கிணறு ஆகிய இடங்களில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் முன்னிலையில், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் திரு.மா.வள்ளலார்,I A S., அவர்கள் இன்று(26.12.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இலங்கைத் தமிழர்களது முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகள் கட்டித் தரப்படும். முகாம்களின் அடிப்படைவசதிகள் மேம்படுத்தப்படும். ஆண்டுதோறும் இலங்கைத் தமிழர் வாழ்க்கைத் தர மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற தமிழ்நாடு சட்டப் பேரவைவிதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பின்படி, திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.அதன்படி, பொறியியல்/வேளாண்/முதுநிலை பட்டப்படிப்பு மாணவ, மாணவியருக்கு கல்வி மற்றும் விடுதிக் கட்டணம் வழங்குதல், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி, சுய உதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி மற்றும் சமுதாய முதலீட்டு நிதி, மாதாந்திர பணக்கொடை உயர்வு, இலங்கைத் தமிழர்களுக்கு விலையில்லாமல் அரிசி, விலையில்லா எரிவாயு இணைப்புகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் மையங்களில் பல்வேறு கட்டங்களாக புதிய வீடுகள் கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அருப்புக்கோட்டை வட்டம் குல்லூர்சந்தை, காரியாபட்டி வட்டம் மல்லாங்கிணறு ஆகிய இடங்களில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையங்களில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின் போது, புதிதாக கட்டி ஒப்படைக்கப்பட்டுள்ள குடியிருப்பு வீடுகளையும், சாலை மற்றும் குடிநீர் இணைப்பு வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.மேலும் முகாமில் உள்ள அடிப்படை வசதிகள், வழங்கப்படும் குடிநீர் மின்சாரம், சாலை, மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் குறித்து, முகாம் வாழ் தமிழர்களிடம் கேட்டறிந்தார்.இந்த ஆய்வின்போது திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், தனி வட்டாட்சியர்(அயலகத் தமிழர் நலன்) திருமதி கார்த்திகேயினி, அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
0
Leave a Reply