" துளி நீரில் அதிக பயிர் " திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய நுண்ணீர்பாசனம் அமைத்து விவசாயிகள் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
‘துளி நீரில் அதிக பயிர்” திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்திற்கு 1100 ஹெக்டர் பொருள் இலக்கும் ரூ.5.50 இலட்சம் நிதி இலக்கும் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நுண்ணீர்ப்பாசன அமைப்புகள் நிறுவுவதற்கு சிறு/குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் சிறு/குறு விவசாயிகள் அதிகபட்சமாக 2 ஹெக்டர் வரையும், இதர விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 5 ஹெக்டர் வரையும் நுண்ணீர்ப்பாசனம் அமைத்து பயன்பெறலாம்.
மேலும் ‘துளி நீரில் அதிக பயிர்” நுண்ணீர்ப்பாசன திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் துணை நீர் மேலாண்மைத் திட்டத்திலும் இணைந்து பயன்பெறலாம். துணை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட குறு வட்டங்களில் ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கு அதிகபட்சமாக ரூ.25,000- மானியமாக வழங்கப்படும்.மேலும் நீர் சேமிப்பு அமைப்புகள் நிறுவுவதற்கு 1 கன மீட்டருக்கு ரூ.125- என்ற அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.75,000- மானியமாக வழங்கப்படும். புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறு /திறந்த வெளி கிணறுகளில் மோட்டார் (மின் மோட்டார், டீசல் மோட்டார்) நிறுவுவதற்கு அதிகபட்சமாக ரூ.15,000- மானியம் வழங்கப்படும்.
நீர் ஆதாரங்களில் இருந்து நிலத்திற்கு பாசன குழாய்கள் மூலம் பாசன நீர் கொண்டு செல்வதற்கு அதிகபட்சமாக ரூ.10,000- வரை மானியம் வழங்கப்படும். மேலும் சொட்டுநீர்ப் பாசனத்திற்கு தானியங்கி (Automation) பாசன அமைப்பு நிறுவுவதற்கு 1 ஹெக்டர் பரப்பிற்கு அதிகபட்சமாக ரூ.20,000- வரை மானியம் வழங்கப்படும்.
மேற்காணும் திட்டங்களில் பயன்பெற ஆர்வமுள்ள விவசாயிகள் ஆதார் அட்டை நகல், ரேசன் அட்டை நகல், பட்டா, பயிர் அடங்கல், சிறு/குறு விவசாயி சான்று, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் MIMIS என்ற இணையத்தின் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம் அல்லது விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை நேரில் அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply