போலி ஆவணங்கள் தயார் செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லினை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் எச்சரிக்கை.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், விருதுநகர் மண்டலத்தில் நடப்பு கே.எம்.எஸ் 2025-2026 சம்பா பருவத்தில் விவசாயிகளின் நலன் கருதி, இதுவரை 34 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2545/- மற்றும் பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500/-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
17.02.2026 வரை 19,405 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு 2508 விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.39,48,13,414/-ஐ (ரூபாய் முப்பத்தி ஒன்பது கோடியே நாற்பத்தி எட்டு இலட்சத்து பதிமூன்றாயிரத்து நானூற்றி பதிநான்கு மட்டும்) வரவு வைக்கப்பட்டுள்ளது.
இந்நேர்வில், விளை நிலங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டதை கள ஆய்வில் உறுதி செய்த பின்னரே விவசாயிகளுக்கு முறையாக 10(1) சிட்டா மற்றும் அடங்கல்கள் கிராம நிர்வாக அலுவலர்களால் வழங்கப்பட வேண்டும் என்றும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்றும், வெளி மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் அல்லாத நபர்களிடமிருந்து போலி ஆவணங்கள் தயார் செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லினை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், மேற்படி செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்படும் கொள்முதல் நிலைய பருவகால பணியாளர்கள் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டம் மற்றும் கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் அத்தியாவசிய பண்டங்களின் விநியோகம் பராமரிக்கும் சட்டம் 1955-ன் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ,, அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply