சாத்தூர் நகரின் வழியாகப் பாயும் வைப்பாறு நதியில் உள்ள முள்செடிகளை அகற்றி மரம் நட்டு பராமரிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வைப்பாறு தடுப்பணை அருகே சாத்தூர் இன்னர் வீல் கிளப் (SATTUR INNER WHEEL CLUB ) என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் சார்பில், சாத்தூர் நகரின் வழியாகப் பாயும் வைப்பாறு நதியில் உள்ள முள்செடிகளை அகற்றி மரம் நட்டு பராமரிக்கும் பணிகளை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கடற்கரைராஜ் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (04.07.2026) தொடங்கி வைத்தார்.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தோன்றும் நிசபா நதி, தேவியாறு, நகரியாறு, சீவலப்பேரியாறு மற்றும் காயல்குடியாறு ஆகிய சிற்றாறுகள் ஒன்றிணைந்து வெம்பக்கோட்டை அணைப் பகுதியில் வைப்பாறாக உருவாகின்றன. அங்கிருந்து விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக சுமார் 80 கிலோமீட்டர் பயணித்து வங்கக் கடலில் கலக்கின்றன.
இந்நதி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கும், விவசாயத்திற்கும் முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது.
தற்போது சாத்தூர் நகராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகள் வழியாகப் பாயும் சுமார் 2.50 கிலோமீட்டர் நீளமுள்ள வைப்பாற்றின் கரைகள் மற்றும் ஆற்றுப்பகுதிகளில், நீரோட்டத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சீமைக் கருவேல மரங்கள் மற்றும் புதர்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளன. மேலும், பொதுமக்களால் கொட்டப்படும் திடக்கழிவுகளால் ஆற்றின் சுற்றுச்சூழல் பெருமளவில் மாசடைந்துள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு, வைப்பாற்றை தூய்மைப்படுத்துதல், சீமைக் கருவேல மரங்கள் மற்றும் புதர்களை அகற்றுதல், ஆற்றங்கரைகளை சீரமைத்தல், மேலும் கரையோரங்களில் நாட்டுமரக் கன்றுகளை நட்டு பசுமையை உருவாக்குதல் ஆகிய பணிகளை சமூக நல நோக்கத்துடன் INNER WHEEL CLUB SATTUR என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
இந்த முயற்சியின் மூலம் சாத்தூர் பகுதியில் பாயும் வைப்பாறு தூய்மையான, இயற்கை வளம் மிக்க, சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆறாக மாற்றப்படுவதோடு, நீரோட்டம் மேம்பட்டு, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கும் பெரும் பயன் கிடைக்கும்.
அந்த வகையில் சாத்தூர் நகரின் வழியாகப் பாயும் வைப்பாறு நதியில் உள்ள முள்செடிகளை அகற்றிமரம் நட்டு பராமரிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், செயற்பொறியாளர்(வைப்பாறு வடிநிலக் கோட்டம்) திருமதி மலர்விழி, சாத்தூர் நகர்மன்றத்தலைவர் திரு.குருசாமி, தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply