மாவட்ட அளவிலான வங்கியாளர் கூட்டத்தில் 2026-27-ம் நிதியாண்டிற்கான கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், (19.02.2026) மாவட்ட அளவிலான வங்கி மேலாளர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.நபார்டு வங்கி வருடந்தோறும் வளம் சார்ந்த கடன் திட்டத்தை தயாரித்து வெளியிட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தின் 2026-27 ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்ட ஆவணத்தை நபார்ட் வெளியிட்டுள்ளது. அதன்படி முன்னுரிமைத் துறை கடனளிப்பின் கீழ் மாவட்டத்தில் வழங்கக்கூடிய மொத்த கடன் திறன் ரூ.22,681.31 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
விவசாயத் துறைக்கு ரூ.11,576.97 கோடி கடன் திறன் கணிக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயக் கடன் ரூ.10,062.91 கோடி, விவசாய உட்கட்டமைப்பு ரூ.601.53 கோடி மற்றும் இணைச் செயல்பாடுகள் (உணவு & வேளாண் செயலாக்கம் உள்ளிட்டவை) ரூ.912.54 கோடி அடங்கும். பயிர் கடன், விவசாய இயந்திரமயமாக்கல், நீர்வள மேம்பாடு, தோட்டக்கலை, மாடு/கோழி/ஆடு வளர்ப்பு, மீன்வளம் போன்ற துறைகள் இதில் அடங்கும்.குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்கு ரூ.9,418.48 கோடி கடன் திறன் கணிக்கப்பட்டுள்ளது. உற்பத்தித் துறை மற்றும் சேவைத் துறைகளுக்கான நீண்டகால கடன் மற்றும் வேலை மூலதனத் தேவைகள் இதில் அடங்கும்.மற்ற முன்னுரிமைத் துறைகளான ஏற்றுமதி கடன் ரூ.77.25 கோடி, கல்வி ரூ.193.65 கோடி, வீடமைப்பு ரூ.279.32 கோடி, சமூக உட்கட்டமைப்பு ரூ.104.44 கோடி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ரூ.112.73 கோடி மற்றும் பிற துறைகள் ரூ.918.48 கோடி ஆகியவை அடங்கும்.
மாவட்ட அளவிலான கடன் திட்டமிடலுக்கான முக்கிய ஆவணம் இதுவாகும். விவசாய உட்கட்டமைப்பு மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிக்கான கடனளிப்பை வங்கிகள் அதிகரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார். நபார்ட் மாவட்ட வளர்ச்சி மேலாளர் திருமதி அனுஷா எலிசபெத் அவர்கள் துறை வாரியான கடன் திறனை விளக்கி, உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPOs - Farmer Producer Organizations) மற்றும் மதிப்பூட்டல் முதலீடுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்டார்.இக்கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட நபார்டு வங்கியின் துணை பொது மேலாளர் திருமதி அனுசுயா எலிசபெத், நபார்டு மாவட்ட மேலாளர் திரு.ராஜா சுரேஷ்வரன், மாவட்ட முதன்மை வங்கி மேலாளர் திரு.பாண்டிசெல்வன், வங்கி மேலாளர்கள், அனைத்து வங்கியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
0
Leave a Reply