வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்கள் மற்றும் புதிதாக பெயர் சேர்க்க வேண்டியவர்கள் 19.12.2025 முதல் 18.01.2026-க்குள் விண்ணப்பங்களை அளிக்கலாம்.
2026-ஆம் ஆண்டு சனவரி 1-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணி நடைபெற்று வருவதன் ஒரு கட்டமாக கடந்த 19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்கள் மற்றும் புதிதாக பெயர் சேர்க்க வேண்டியவர்கள் 19.12.2025 முதல் 18.01.2026 வரையிலான காலத்தில் இதற்கான விண்ணப்பங்களை அளிக்க இயலும்.
பொதுமக்கள் இவ்விண்ணப்பங்களை எளிதில் அளிப்பதற்காக கடந்த 27.12.2025, 28.12.2025 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக மாவட்டம் முழுவதுமாக 16,270 படிவங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மீண்டும் 03.01.2026 மற்றும் 04.01.2026 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
தற்போது 18 வயதினைப் பூர்த்தி செய்திருக்கும் இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவ மாணவியர்களிடமிருந்து இம்முகாம்களில் படிவங்கள் மற்றும் ஆவணங்களைப் பெற்று அந்த இடத்திலேயே தேர்தல் ஆணைய வலைதளத்தில் படிவத்தைப் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
29.12.2025 அன்று திருச்சுழி அரசு கலைக் கல்லூரியில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் திருச்சுழி தொகுதியில் பெயர் சேர்ப்பதற்காக 40 படிவங்கள் பெறப்பட்டது. 30.12.2025 சிவகாசியில் உள்ள அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, எஸ்.எப்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றிலும், ராஜபாளையத்தில் உள்ள ராஜுக்கள் கல்லூரி, என்.ஏ.மஞ்சம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு பாலகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சாத்தூர் மேட்டமலையில் உள்ள கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பி.எஸ்.என்.எல் கல்வியியல் கல்லூரி ஆகியவற்றிலும், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத நபர்கள் மற்றும் 01.01.2008 அல்லது அதற்கு முன்னர் பிறந்துள்ளவர்கள் (01.01.2026 அன்று 18 வயதைப் பூர்த்தி செய்பவர்கள்), தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்வதற்கு படிவம் 6 -ல் விண்ணப்பங்களை அளிக்கலாம். அதே போன்று வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தங்கள் ஏதேனும் செய்ய வேண்டியிருந்தாலோ, அல்லது ஒரே தொகுதிக்குள் ஒரு பாகத்திலிருந்து மற்றொரு பாகத்திற்கு மாற்றம் செய்ய வேண்டியிருந்தாலோ அல்லது ஒரு தொகுதியிலிருந்து மற்றொரு தொகுதிக்கு மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் படிவம்-8 ல் விண்ணப்பம் அளிக்கலாம். வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள ஒருவரது பெயரை நீக்கம் செய்ய வேண்டியிருப்பின் படிவம்-7 ல் விண்ணப்பம் அளிக்கலாம்.
மேலும், 2026 -ம் ஆண்டில் ஏப்ரல்-1, ஜூலை-1, அக்டோபர்-1 ஆகிய எதிர்வரும் தகுதி ஏற்படுத்தும் நாட்களில் 18 வயதைப் பூர்த்தி செய்பவர்களும் (2.1.2008 முதல் 01.11.2008 வரை பிறந்துள்ளவர்கள்) தற்போதே படிவம்-6-ல் முன்கூட்டிய விண்ணப்பத்தை அளிக்க இயலும். இவ்விண்ணப்பங்கள் அந்தந்த தகுதி ஏற்படுத்தும் நாட்களில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
மேலும், இந்த விண்ணப்பங்களை சிறப்பு முகாம்களில் மட்டுமல்லாமல், 18.01.2026 வரை அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் நேரிலும் மற்றும் அஞ்சல் மூலமாகவும் அளிக்கலாம். இந்த விண்ணப்பங்களை https://voters.eci.gov.in என்ற வலைதளத்தின் மூலமும், Voters Helpline என்ற ஆன்ட்ராய்டு செயலி மூலமாகவும் ஆன்லைன் விண்ணப்பமாக பதிவு செய்யலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply