டிமென்சியா நோயாளிகளை கவனித்துக்கொள்ள..,
டிமென்சியா நோயாளிகள் அன்றாட தேவைகளைச் சரிவரச் செய்துகொள்ள நாம் அவர்களுக்கு உதவ வேண்டும்.
முடிந்த அளவுக்கு நோயாளிகள் தனித்தே செயல்பட ஊக்குவிக்க வேண்டும். தேவைப்பட்டால் அவர்களுக்கு உதவுவதற்குத் தயாராக இருக்க வேண்டும்.
நோயாளியை எதிர்த்துப் பேசவோ, அவருடைய செய்கை சரியில்லை என்றோ வாதாடக் கூடாது.
அவரிடம் உள்ள திறமைகளைப் பாராட்டி, அதைத் தொடர்ந்து செய்ய உற்சாகப்படுத்த வேண்டும்.
நோயாளிகளிடம் பேசும்போது தெளிவாகவும், நிதானமாகவும், நேருக்கு நேர் அவர் புரிந்துகொள்ளுமாறு பேச வேண்டும்.
ஆறுதலாகத் தொடுதல், கையைப் பிடித்துக்கொள்ளுதல், தடவிக் கொடுப்பதன் மூலம் நம்முடைய அன்பைத் தெரிவிக்க வேண்டும்.
எந்தச் சூழ்நிலையிலும் அவரைத் தனிமைப்படுத்த வேண்டாம்.முடிந்தவரை உணவு உண்ணும்போதும், தொலைக்காட்சியைப் பார்க்கும்போதும் அவரும் உங்களோடு சேர்ந்தே இருக்கட்டும்.
அவருக்கே தெரியாமல், இருந்த இடத்திலேயே சிறுநீர் கழித்துவிட்டால், அதைப்பெரிதுபடுத்த வேண்டாம். நோயின்காரணமாக இதைப் போன்றே அவர் செய்யும் சிலவேலைகள் அவரை அறியாமலேயே நடக்கின்றன.
சத்தான உணவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். உணவை அவரே எடுத்து உண்ண முடியாத நிலை வரும்போது. நீங்கள் ஊட்டிவிட வேண்டிய நிலை ஏற்படும். அதை ஒரு சுமையாகக் கருதாமல் சுகமாக எண்ணுங்கள்.
மருந்தை அவரே எடுத்துக்கொள்ள அனுமதிக்கக்கூடாது. ஏனென்றால், சில நேரங்களில் அவர் உட்கொள்ள மறந்துவிடுவார் அல்லது மருந்து சாப்பிட்டதை மறந்து, மறுமுறை அந்த மருந்தையே சாப்பிட்டுவிடுவார். ஆகவே, உறவினர்களே மருந்தைக் கொடுக்க வேண்டும்.
சில நேரங்களில் கோபமாகவும் பதற்றமாகவும் முரட்டுத்தனமாகவும் நடக்கலாம். அப்போது அவரிடம் நீங்களும் உங்களின் முரட்டுத்தன்மையைக் காண்பிக்க வேண்டாம். சாந்தமாகப் பேசி, படுக்கையில் படுக்க வைத்து, தேவையான மாத்திரைகளைக் கொடுத்தால் அவர் சாந்தமடைவார்.
முடிந்தவரை நடைப்பயிற்சி செய்யுமாறு ஊக்குவிக்கலாம்.
புலன் உறுப்புகளைத் தூண்டும் பயிற்சிகள்: தொட்டு அறியும் உணர்வுகளைத் தூண்டக்கூடிய பயிற்சிகளை அளிக்க வேண்டும்
உதாரணம்: கண்களை மூடிக்கொண்டுபொருட்களைக் கண்டுபிடிக்கும் விளையாட்டு. உள்ளிருப்பதைக் காணமுடியாதபடி வெவ்வெறு பொருட்களை ஒரு பையில் போடவும். அவர் கையை உள்ளே விட்டு அந்தப் பொருட்களை என்னவென்று யூகிக்கச் செய்ய வேண்டும்
டிமென்சியாவினால் பாதிக்கப்பட்ட வயதானவர்கள், பழக்கத்துக்கு ஒரு குழந்தையைப் போல! அவர்களுக்கு குழந்தைக்குரிய அன்பையும், பெரியவருக்குரிய மரியாதையையும் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். மறதி உள்ளவர்கள் தானே, அவர்களுக்கு என்ன தெரியும் என்று எதிலும் குறைகள் வைக்க வேண்டாம். இது தெய்வத்தையே ஏமாற்றுவது போல ஆகும் !
0
Leave a Reply